பிரியமான தோழி தொடரை முடிக்க சன் டிவி முடிவு
சன் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பிரியமான தோழி தொடர் விரைவில் முடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
HIGHLIGHTS
சன் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பிரியமான தோழி தொடர் விரைவில் முடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன்டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1 மணி ஸ்லாட்டில் வரும் இந்த சீரியல் 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகி விட்டன. முக்கியமான கட்டத்தில் சென்று கொண்டிருக்கும் கதை பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
கதாநாயகனான ஆதியின் அண்ணனைக் கொன்றுவிட்டு தன் மகளை ஆதிக்கு கட்டிக் கொடுக்க நினைக்கும் பிசினஸ் மேன், தான் செய்த கொலையை மறைக்க திட்டம் போடுகிறார். அது எப்படியோ ஆதிக்கும் ஆதியின் அண்ணியும் தோழியுமான பவித்ராவுக்கும் தெரியவருகிறது. இருந்தாலும் உறுதியாக தெரியவில்லை. இதனிடையே ஆதியைக் காதலித்த சங்கவியின் குணம் மாறியதால், பவித்ராவை மிகவும் மட்டம் தட்டி அவளை ஒதுக்க நினைக்கிறாள் சங்கவி. அதற்கு முடிவு கட்டும் வகையில் சங்கவியின் முன்னே பவித்ராவுக்கு தாலி கட்டுகிறான் ஆதி. இதனால் குடும்பத்தில் பெரிய குழப்பம் ஏற்படுகிறது.
சங்கவி பவித்ராவை பழிவாங்க துடித்து, அவளைக் கொல்லவும் முயற்சிக்கிறாள். இந்த வேளையில், விபத்து ஏற்பட்டு சங்கவி பழசை மறந்து ஆரம்பத்தில் இருந்த நல்ல குணங்களோடு மட்டும் இருக்கிறாள். இதனால் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுகிறது ஆதியின் குடும்பம். காரணம் அவளுக்கு பழைய விசயங்கள் அனைத்தும் தெரிந்தால் மீண்டும் கோமாவுக்கு சென்றுவிட வாய்ப்புண்டு.
இதனையும் மீறி வாசுகி வாயால் இந்த விசயங்கள் சங்கவிக்கு தெரியவர, மயக்கமாகிறாள் சங்கவி. இதனால் என்ன ஆகுமோ என அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் இந்த தொடர் பயணிக்கிறது.
இந்த சீரியலில் விக்கி ரோஷன், சாண்ட்ரா பாபு, தீப்தி ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களைத் தவிர, வனஜா, பாஸ்கர், பாலசுப்ரமணி, பிந்து பங்கஜ், காத்தாடி ராமமூரத்தி உள்ளிட்டோரும் மற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால், தற்போது இந்த சீரியலின் கதை சுவாரஸ்யமற்றதாக மாறிவிட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், இந்த சீரியலை முடிப்பது நல்லது என சன் டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பிரியமான தோழி தொடரை முடித்த பிறகு, அதே ஸ்லாட்டில் புதிய தொடர் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புதிய தொடரில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
பிரியமான தோழி தொடரை முடிப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும், புதிய சீரியல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.