தவறான தகவல் பரப்பும் நாடுகளில் இந்தியா முதலிடம்
உலக அளவில் தவறான தகவல் பரப்பும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
HIGHLIGHTS
இன்றைய டிஜிட்டல் கால கட்டத்தில் போலி செய்திகள் மிகவும் வேகமாக பரவி வருகின்றன. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் உண்மை என்று பொதுமக்கள் நம்பி வருவதால், போலி செய்திகள் பரப்புவோர் அத்தகைய தளங்களை தங்களுக்கு சாதகமாக உபயோகித்து வருகின்றனர். இந்த நிலையில், உலக அளவில் தவறான தகவல் பரப்பும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
உலகப் பொருளாதார மன்றம் 2024த்தின் உலகளாவிய இடர் அறிக்கைக்காக ஆய்வு செய்யப்பட்ட நிபுணர்களின் கூற்றுப்படி, உலகெங்கிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்று தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள ஆண்டில் வெளியாகியுள்ள இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதாரத்தின் 34 வகையான அளவுகோல், சுற்றுச்சூழல், புவிசார் அரசியல், சமூக மற்றும் தொழில்நுட்ப அபாயங்களின் அடிப்படையில் தவறான தகவல்கள் பல்வேறு நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தவறான தகவல் என்பது ஒரு விஷயத்தை எழுபவர், வேண்டுமென்றே தங்கள் பார்வையாளர்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்வது என வரையறுக்கப்படுகிறது. தீங்கு விளைவிக்கும் தவறான போலியான தகவல்கள், குறிப்பிட்ட விஷயங்களுக்கு எதிராக சதி செய்வதை போன்றது என்கிறார்கள்.
தவறான தகவல்களின் ஆபத்து அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் தவறான தகவல்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிக அச்சுறுத்தலாக இருக்கும் என்று உலகப் பொருளாதார மன்றம் அதன் வருடாந்திர 'உலகளாவிய அபாயங்கள் அறிக்கையில்' தெரிவித்துள்ளது.
தவறான தகவல்களை தொடர்ந்து, தொற்று நோய்கள், சட்டவிரோத பொருளாதார நடவடிக்கைகள், வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவை இந்தியாவில் குறுகிய கால அபாயங்களாக உள்ளன. நீண்டகாலமாக 10 ஆண்டுகளுக்கு பார்த்தால், வானிலை நிகழ்வுகள், கால்நிலை மாற்றங்கள் மிகப்பெரிய உலகளாவிய ஆபத்தாக உள்ளது.
இந்தியாவின் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் போலிச் செய்திகள் நிறைந்திருந்தன. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மூலமாக கட்சிகள் போலி செய்திகளை பரப்பின. அந்த சமயத்தில் ஏற்பட்ட ஆன்லைன் கோபம், நிஜ உலக வன்முறையாக பரவக்கூடும் என்ற அச்சத்தை அதிகப்படுத்தியது என்று அறிக்கை கூறுகிறது. மிக சமீபத்தில், இந்தியாவில் கோவிட்தொற்றுநோய்களின் போது, மீண்டும் வாட்ஸ்அப் வழியாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டது பிரச்சினையாக மாறியதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
எல் சால்வடார், சவூதி அரேபியா, பாகிஸ்தான், ருமேனியா, அயர்லாந்து, செக்கியா, அமெரிக்கா, சியரா லியோன், பிரான்ஸ் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் தவறான தகவல்களில் தாக்கத்தினால் அதிகளவு ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகள் ஆகும். தவறான தகவல்களால் ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் இங்கிலாந்து 11ஆவது இடத்தில் உள்ளது.
தேர்தல் செயல்முறைகளின்போது தவறான தகவல்கள் பரப்பப்படுவது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும், அரசியல் அமைதியின்மை, வன்முறை, பயங்கரவாதம் மற்றும் ஜனநாயக செயல்முறைகளில் நீண்டகால ஆபத்தை ஏற்படுத்தலாம் என அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
இந்த ஆய்வானது, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை எடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை, வணிகம், அரசாங்கம், சர்வதேச சமூகம் மற்றும் சிவில் சமூகம் ஆகிய 1,490 நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.