ரம்யமான மணப்பெண்ணிற்கு முகம் பளபளக்க!
திருமண சடங்குகளின் போதும், அதற்குப் பிறகு எடுக்கப்படும் புகைப்படங்களிலும் அசத்த வேண்டுமென ஆசை இல்லாத பெண்ணே கிடையாது!
HIGHLIGHTS
நெருங்கும் திருமண நிகழ்விற்காக மணப்பெண் தன்னைத் தானே தயார் செய்து கொள்வதில் அதிக கவனமும் ஆர்வமும் செலுத்துவது இயல்பு. அழகும், பொலிவும் நிறைந்த முகத்தோற்றமே ஒவ்வொரு மணப்பெண்ணின் கனவு. திருமண சடங்குகளின் போதும், அதற்குப் பிறகு எடுக்கப்படும் புகைப்படங்களிலும் அசத்த வேண்டுமென ஆசை இல்லாத பெண்ணே கிடையாது!
மலரும் முகத்திற்கு இயற்கையின் கொடை
விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்களும், பார்லர்களில் செய்யப்படும் முகப்பூச்சுகளும் நிச்சயம் ஓரளவு மினுமினுப்பைத் தரும். ஆனால், அதில் அடங்கியிருக்கும் வேதிப்பொருட்கள் நீண்டநாள் பயன்பாட்டில் சருமத்துக்கு பாதிப்பை உண்டாக்கிவிடலாம். எனவே, நம் வீட்டுச் சமையலறையிலிருந்தே அற்புதமான முகப்பொடிகளைத் தயாரித்து சருமத்தின் ஜொலிப்பையும், ஆரோக்கியத்தையும் பெறலாம்!
சரும வகையை அறிதல் அவசியம்
இயற்கைப் பொருட்கள் என்றாலும், அவை அனைவருக்கும் ஒத்து வருவதில்லை. உங்களின் சருமம் வறண்டதா, எண்ணெய்ப் பசை மிக்கதா, அல்லது இரண்டும் கலந்ததா என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். வறண்ட சருமத்தினர் அதிக ஈரப்பதம் தரும் பொருட்களையும், எண்ணெய்ப் பசை உள்ளவர்கள் க்ளே எனப்படும் களிமண் வகைகளையும் பயன்படுத்துவது நல்லது.
தேன் - ஆரோக்கியத்தின் ஊற்று
சருமத்துக்கு இயற்கையான ஈரப்பதமளித்து, அதை மிருதுவாக்குவதில் தேனுக்கு நிகர் தேனேயில்லை. சருமத்தில் ஏற்படும் வறட்சியால் உருவாகும் சுருக்கங்களையும், கரும்புள்ளிகளையும் தேன் போக்குகிறது. இரண்டு ஸ்பூன் தேனுடன், சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பின் கழுவினால் பொலிவு கூடும்.
கடலை மாவு - பாரம்பரிய பொலிவு
கடலை மாவை தண்ணீரில் குழைத்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய்ப் பசை நீங்கும். அரைத்த பச்சைப் பயறு, கடலை மாவு, சிறிது பால், மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவினால், முகம் பிரகாசமாகும்.
மஞ்சளின் மகிமை
மஞ்சள் இந்திய சமையலின் பிரிக்க முடியாத அங்கம்! இதன் கிருமிநாசினித் தன்மை அனைவரும் அறிந்ததே. ஆனால், மஞ்சள் ஒரு அருமையான இயற்கை முகப் பொடியும்கூட. முகத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மஞ்சள் போக்குகிறது. உடலுக்கும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது நம் பாரம்பரியத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. மஞ்சள் தூளுடன் சிறிது கடலை மாவு, பால் (அ) தயிர், தேன் கலந்து முகத்தில் தடவிக் கழுவி வர முகம் பொலிவு பெறும்.
குங்குமப்பூ - விலை உயர்ந்த ஆனால் அற்புதமான தேர்வு
குங்குமப்பூவின் சிறப்புகளைச் சொல்லி மாளாது. விலை கொஞ்சம் அதிகமானாலும், அது தரும் பலன் சருமத்துக்கு அமிர்தம்! சில குங்குமப்பூ இதழ்களை பாலில் ஊறவைத்து, அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி பின் கழுவினால் சருமம் அடுத்த கட்ட அழகுக்கு சென்றுவிடும். அதிலும் மணமகளுக்கு குங்குமப்பூவின் பயன்பாடு அபரிமிதமான பொலிவைத் தரும்.
பழங்களின் பங்களிப்பு
முழுமையாக பழுத்த வாழைப்பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ முகம் வாடிப்போன நிலையிலிருந்து மீளும். அதே போல், பப்பாளிப் பழத்தை மசித்து, அதன் விதைகளுடன் முகத்தில் தடவி சிறிதுநேரம் கழித்துக் கழுவினால் தோலில் படிந்த இறந்த செல்கள் நீங்கும்.
இவற்றையும் ஒருமுறை முயற்சிக்கலாம்
முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டரின் கலவை சருமத்தின் செல்களைப் புத்துயிர் பெறச்செய்யும்.
சந்தனத்தூளும் ரோஸ் வாட்டரும் சேர்ந்த கலவை முகத்துக்கு நறுமணத்தையும், குளிர்ச்சியையும் தரும்.
இத்தனை அற்புதமான முகப்பொடிகளை வீட்டிலேயே தயாரிக்கும்போது, வெளியில் விற்கும் க்ரீம்களின் பக்கம் செல்லத் தோன்றாது அல்லவா!
மணப்பெண்ணே நினைவில் கொள்!
அழகான முகம் ஒரே நாளில் உருவாவதில்லை. திருமணத்துக்கு சில வாரங்களுக்கு முன்பே இந்த பராமரிப்புகளை தொடங்கி விடுவது நல்லது. மேலும், தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும், உணவில் அதிக பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்வதும் சருமத்துக்கு கூடுதல் நன்மையைத் தரும். மன அமைதியோடு, நல்ல தூக்கத்தோடு இருந்தால், அதுவே உங்கள் முகத்தில் அற்புத பிரகாசத்தை ஏற்றிவிடும்.