வாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறதா?
வாசிப்பு தரும் பரந்த அறிவு, நுட்பமான சிந்தனை, ஒரு முழுமையான ஆளுமையை நமக்குள் கட்டமைக்கிறது.
HIGHLIGHTS
கல்வி என்று சொன்னவுடன் நம் நினைவிற்கு வருவது பள்ளிகள், கல்லூரிகள், பட்டங்கள் தான். ஆனால், எழுத்தறிவு அற்ற ஒருவர் கூட தன் அனுபவங்களால் கற்பதுண்டு, சிந்திப்பதுண்டு. அப்படியென்றால் கல்வி என்பது நமக்கு கிடைக்கும் தகவல்களைச் செயலாக்கி, பயன்படுத்தும் திறன் எனக்கொள்ளலாம். இந்த திறனுக்கு வாசிப்பு என்ற செயல் பெரும் உந்து சக்தியாக விளங்குகிறது. எழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் சக்தி உள்ளவர், எந்த மூலத்திலிருந்தும் அறிவைப் பெறமுடியும். பார்ப்பதை, கேட்பதை விட வாசிப்பது மூலம் கிடைக்கும் அறிவுக்கு எல்லைகள் இல்லை. ஆனால் இன்றைய பரபரப்பான உலகில், வாசிப்பின் ஆழத்தையும், வாசிப்பால் ஒரு மனிதன் அடையும் முழுமையையும் நாம் மறந்துவிட்டோமா?
வாசிப்பும் மனிதனும் - ஓர் இணை பிரியா உறவு
எழுத்துக்களே இல்லாத காலத்தில், மனிதன் தன் அறிவை வாய்மொழி மரபாகவும் ஓவியங்களாகவும் கடத்தி வந்தான். எழுத்து உருவான அந்தப் பொற்காலத்திலிருந்து, வாசிப்பு என்பது மனித அறிவின் அடித்தளமாகவே இருந்து வருகிறது. புத்தகங்கள் மட்டுமல்ல, கல்வெட்டுகள் முதல் இன்றைய இணையத்தளச் செய்திகள் வரை நம் வாசிக்கும் எல்லை விரிந்துள்ளது. வாசிப்பு என்பது வெறும் தகவல்களைப் பரிமாறும் செயலாக மட்டும் இல்லாமல், மனித மனங்களை இணைக்கும் ஒரு பாலமாகவும் திகழ்கிறது.
வாசித்தலின் வல்லமை
சிந்தனையின் சுடர்: வாசிப்பு சிந்திக்கத் தூண்டுகிறது. நாம் அன்றாடம் செய்திகளிலோ அல்லது நூல்களிலோ உள்வாங்கும் எண்ணங்கள் நம்முள் விவாதங்களை எழுப்புகின்றன. இந்த விவாதங்கள் தான் நமக்கே உரிய தனித்துவமான பார்வையை உருவாக்குகின்றன.
படைப்பின் ஊற்றுக்கண்: அறிவை விதைத்தால் படைப்புகள் முளைக்கின்றன. ஒரு மனிதன், தான் வாசித்ததை தனக்கு ஏற்றவாறு படைப்புகளாக பல்வேறு துறைகளிலும் வெளிப்படுத்துகிறான். புனைவுகளாகட்டும், அறிவியல் கண்டுபிடிப்புகளாகட்டும் சமூக சீர்திருத்தங்களாகட்டும் வாசிப்பே அவற்றின் விதையாக இருக்கிறது.
மனித வளர்ச்சிக்கு அடித்தளம்: எந்த ஒரு சமுதாயமும் அறிவுசார் வளர்ச்சியே, தொழில்நுட்ப முன்னேற்றமே நிலையான, வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க உதவும். இந்த அறிவின் பெருக்கத்திற்கு வாசிப்பு இன்றியமையாதது.
ஒரு சமூகத்தின் கண்ணாடி
ஒரு சமுதாயத்தின் வாசிப்புப் பழக்கம்தான் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு அடையாளமாக திகழ்கிறது. அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்வது, பொது நூலகங்களை ஊக்குவிப்பது இவையெல்லாம் ஒரு சமூகத்தின் அறிவு தாகத்தை வெளிக்காட்டுகின்றன. ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தின் குடிமகன்கள் தங்கள் கருத்துக்களை உருவாக்கவும், விவாதங்களில் ஈடுபடவும், நாட்டின் ஜனநாயக மரபுகளில் தீவிர பங்கேற்பவர்களாகவும் வாசிப்பு அவர்களை மாற்றுகிறது.
இன்றைய நிலை
உலகம் வியக்கும் அளவுக்கு பல கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், புதிய நூல்கள் இன்றைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இதற்கு மிகப்பெரிய பங்காற்றியவை நூலகங்கள் தான். ஆனால் நவீனமயமாகி கொண்டே இருக்கும் உலகில் பல தகவல்களை உடனுக்குடன் கைபேசி மற்றும் இணையம் மூலம் தெரிந்து கொள்கிறோம். இது ஒருவகையில் மக்களின் வாசிக்கும் பழக்கத்தை வெகுவாக குறைத்து விட்டது. முக்கியமான விஷயத்தைப் படித்து புரிந்து கொள்ளவே நேரம் ஒதுக்குவதில்லை. இதன் விளைவு, சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மற்றும் போலியான செய்திகளையும் அப்படியே உண்மை என நம்பிவிடும் அபாய நிலை உருவாகிறது.
என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளுக்கான பங்களிப்பு: மரம் வளர்க்க சிறந்த காலம் என்பது மழைக்காலம், குழந்தை பருவம் என்பது கல்வி தேட சிறந்த காலம். வாசிப்பு பழக்கத்தை சிறு வயதிலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும். இன்றைய தலைமுறை பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு கைபேசியை கையில் கொடுத்து வளர்த்தனர். தவறு அவர்கள் மீது அல்ல; காலத்தின் கட்டாயம்! இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு கதைப்புத்தகங்கள் வாங்கி கொடுத்து, நேரம் செலவிட்டு வாசித்து காண்பித்து அவர்கள் அறிவுத்திறனை வளர்த்தெடுப்பது மிக முக்கியம்.
தொழில்நுட்பத்தின் பயன் : நவீன காலத்தில் தொழில்நுட்பம் நம்மை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது. வாசிப்பின் முக்கியத்துவம் புரியாத தலைமுறைக்கு அதை இணையம் மற்றும் மின்-நூல்கள் (e-books) எனும் வழியில் கொண்டு சேர்க்கலாம். எளிய நடையில் எழுதப்பட்ட நூல்கள், சிறுகதைகள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. அவற்றை இன்றைய இளைஞர்களிடையே பிரபலப்படுத்தலாம்.
காலத்திற்கேற்ப மனிதனின் தேடல் மாறுகிறது. செல்போன்கள், இணையம் என எது தோன்றினாலும் அடிப்படை அறிவை வழங்கும் புத்தகங்களின் பெருமை என்றும் குறையாது. கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு செயல். பள்ளி, கல்லூரி என கல்வி கற்கும் வயதை கடந்த பின்பும் புத்தகங்கள் மூலம் நாம் கற்பதை விடக்கூடாது. வாசிப்பு தரும் பரந்த அறிவு, நுட்பமான சிந்தனை, ஒரு முழுமையான ஆளுமையை நமக்குள் கட்டமைக்கிறது. புத்தகத்தை விட சிறந்த ஆசான் இல்லை!