ஸ்ரீரங்கம் கோயில் பிரச்சினைக்கு அரசியல் சாயம்: அண்ணாமலைக்கு சேகர் பாபு கண்டனம்

அமைச்சர் சேகர் பாபு.
தற்போது சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்கி உள்ளது. தமிழ்நாடு மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் ஐயப்பனை தரிசித்துவி்டடு திரும்பும் வழியில் உள்ள முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார்கள்.
அந்த வகையில் ஆந்திராவைச் சேர்ந்த 34 ஐயப்ப பக்தர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நேற்று தரிசனம் செய்ய வந்துள்ளனர். இங்கு தரிசனத்தை முடித்து விட்டு சமயபுரம், திருவாணைக்காவல், உள்ளிட்ட கோயில்களுக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
வைகுண்ட ஏகாதசி துவக்க நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாமி தரிசனம் செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது. நீண்டவரிசையில் காத்திருந்த ஐயப்ப பக்தர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ஆட்டி அசைத்ததோடு உண்டியலில் தாளமிட்டுள்ளனர். விரைந்து சென்று சாமி தரிசனம் செய்ய அவர்கள் முயன்றதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர்கள் கோவிந்தா கோவிந்தா என கூறி கூச்சலிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த அங்கிருந்த காவலர்கள் அவர்களிடம் அமைதியாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் மீண்டும் உண்டியலில் தாளமிட்டதையடுத்து காவலர்களுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், காவலர் ஒருவரின் தலை உண்டியலில் பலமாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் தன்னை தள்ளிய பக்தரை பிடித்து தள்ளியதில் அவர் கீழே விழுந்தார். தடுமாறி விழுந்த பக்தரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதையடுத்து மூக்கில் வடிந்த ரத்தத்தை துடைத்தபடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் காயத்ரி மண்டபத்திலே ரத்தம் சொட்டச் சொட்ட அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோபத்தில் கூச்சலிட்டனர். இதையடுத்து மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்கநாதன் உள்ளிட்டோர் கோயிலுக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி அழைத்துச் சென்றனர். இது குறித்து கோயில் காவலர் பரத் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதே போல கோயில் காவலர்கள் தரப்பிலும், ஐயப்ப பக்தர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிலுக்குள்ளே பக்தர் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் கோயில் நடை சார்த்தப்பட்டு, பரிகார பூஜைகளுக்குப் பின்னர் மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அளித்த விளக்கத்தில், ஆந்திராவைச் சேர்ந்த 34 பக்தர்கள் உண்டியலை மிகுந்த ஓசையுடன் அடித்தனர். அதோடு கோயில் பணியாளரையும் தாக்கியுள்ளனர். கோயில் பணியாளர் தலைமுடியைப் பிடித்து உண்டியலில் மோதச் செய்துள்ளனர். மற்ற பக்தர்களைத் தரிசனம் செய்யவிடாமல் இடையூறு செய்ததால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் விளக்கம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்கா ரங்ாக கோபுரம் அருகில் இந்து அமைப்புகள் மற்றும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அவர்கள் பக்தர்களை தாக்கிய கோயில் காவலாளிகளை கைது செய்யக்கோரி தர்ணா செய்தனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு இந்து கோவில்களில் இருக்க வேண்டியதில்லை. ஸ்ரீரங்கம் கோவில் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அண்ணாமலை கருத்துக்கு பதிலடி கொடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் சந்தர்ப்ப சூழல்களில் நடக்கும் செயல்களை வைத்து அண்ணாமலை அரசியல் சாயம் பூசி வருகிறார். சென்னை புயல் மழை வெள்ளத்தை வைத்து அவர் அரசியல் செய்ய முயன்றார். அது நடக்காததால் தற்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். ஸ்ரீரங்கத்தில் பக்தர்களுக்கும் கோயில் காவலர்களுக்கும் நடந்த பிரச்சினை சுமூமாக தீர்த்து வைக்கப்படும் என்று கூறி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu