/* */

குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?

இந்த பெயர்ச்சியில் குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுவதால் பொருட் சேர்க்கை ஏற்படும். செய்யும் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும்.

HIGHLIGHTS

குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
X

நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ருது சித்திரை மாதம் 18-ம் நாள் (01.05.2024) அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும், புதன்கிழமையும், திருவோண சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

மகரம் சனி பகவானை ராசிநாதனாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே! நீங்கள் வாதாடுவதில் வல்லவர்கள். இந்த பெயர்ச்சியில் குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது பாக்கிய ஸ்தானம் - லாப ஸ்தானம் - ராசி ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வையில் ஒன்பதாம் பார்வை உங்கள் ராசியிலேயே பதிவது வெகு சிறப்பானது. மற்ற ஐந்து, ஏழாம் பார்வைகள் முறையே உங்கள் ராசிக்கு ஒன்பது, பதினோராம் இடங்களில் பதிகின்றன. இந்த அமைப்பு உங்களுக்கு சகல விதத்திலும் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும் எனக் காட்டுகிறது. அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகளுடன் கலந்துரையாடும் அளவுக்கு பேசப்படுவீர்கள். இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். சிலருக்குப் பலகாலக் கனவாக இருந்த பணிவாய்ப்பு தேடிவரும். உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. வீட்டில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். மனம்போல வீடு, மனை, வாகன வசதிகள் உண்டாகும்.

பழைய கடன்கள் பைசலாகும். பணவரவை சேமிக்கப் பழகுவது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அதீத நெருக்கம் வேண்டாம். பெற்றோர் உடல்நலத்தில் கவனம்செலுத்துங்கள். வாரிசுகளிடம் வீண்கண்டிப்பு தவிருங்கள். பெண்களுக்கு திடீர் யோகத்தால் பொருட் சேர்க்கை ஏற்படும். செய்யும் தொழிலில் சேதங்கள் நீங்கி, லாபங்கள் அதிகரிக்கும். பங்குவர்த்தகம், வீடு ,மனை சார்ந்த தொழிலில் சீரான திட்டமிடல் முக்கியம். அரசியலில் உள்ளவர்களுக்கு திடீர் பதவி, பொறுப்புகளால் பெருமை சேரும். பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. யாருக்கும் வாக்குறுதிகள் எதுவும் தரவேண்டாம். அரசுப்பணியில் உள்ளோர் புதிய வாய்ப்புகளால் ஆதாயம் பெறுவீர்கள். எதிர்பால் நட்புகளிடம் நெருக்கம் தவிருங்கள். மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும். இரவுப் பயணம் எதையும் தொடங்கும் முன் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் காலம் கனிந்து வாய்ப்புகள் பெறுவீர்கள். நரம்பு, அடிவயிறு, முதுகு, கால்கள், தொடை, இடுப்பு உபாதைகள் வரலாம். விநாயகர், அனுமன் வழிபாடு, விசேஷ நன்மைகள் தரும்.

நட்சத்திர பலன்கள்

உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள்:

இந்த குரு பெயர்ச்சியால் பணம் கையாளும் போது கவனத்துடன் இருப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை குறையும். எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும். மனக் குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் பேச்சின் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். சுப பலன்கள் உண்டாகும்.. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

திருவோணம்:

இந்த பெயர்ச்சியால் தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.

அவிட்டம் - 1, 2 பாதங்கள்:

இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.. மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை அவர்களிடம் எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

Updated On: 30 April 2024 4:30 PM GMT

Related News