தமிழக கிராமங்களில் இனி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் :ஒழுங்கு முறை ஆணையம்
24 Hours 3 Phase Eb Supply தமிழகத்தில் நகர்ப்புறங்களில் அளிப்பது போல் கிராமப்புறங்களுக்கும் 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
HIGHLIGHTS
24 Hours 3 Phase Eb Supply
தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் வாரியத்துக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையமானது உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை வீடு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் ஒருமுனை மற்றும் மும்முனை மின் இணைப்பு வழங்கப்படுகிறது. மாநகரம், நகரங்களில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் கிராமங்களில் வழங்கப்படுவதில்லை.
கிராமங்களில் செல்லும் மின் வழித்தடங்களில் வீடு, கடைகள் போன்றவை மட்டுமின்றி விவசாயத்திற்கும் விநியோகம் செய்யப்படுகிறது.விவசாயத்திற்கு இலவசம் என்பதால்தினமும் பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் என ஒரு நாளைக்கு 12 மணிநேரம் மட்டும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. மற்ற நேரங்களில் வழங்கப்படுவதில்லை.
கிராமங்களில் மாவு ஆலைகள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இயந்திரங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றன. ஆனால் எல்லா தரப்பினரும் ஒரே மின்கட்டணத்தைத் தான் செலுத்துகின்றனர். இப்படி இருக்கும்போது கிராம மின் வழித்தடங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் மும்முனை மின்சாரம் வழங்குவது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சேவியர் என்பவர் தன் தொழிற்சாலைக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இதை விசாரித்த ஆணையம் மனுதாரரின் தொழிற்சாலைக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்
தென்மாவட்டங்களான துாத்துக்குடி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பெருத்த பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த இரு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த கால அவகாசமானது பிப்ரவரி 1ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழை காரணமாக திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதைக் கருத்தில்கொண்டு, அம்மாவட்டங்களில் மின்நுகர்வோர் மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்த 2024 ஜனவரி 2ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
தற்போது அந்த காலஅவகாசம் கூடுதலாக பிப்ரவரி 1ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த கால நீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற்சாலைகள் ,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற மின் நுகர்வோர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.