பவானிசாகர் அருகே காட்டு யானை தாக்கியதில் வயதான தம்பதி உயிரிழப்பு
Erode news- பவானிசாகர் அருகே வனப்பகுதிக்குள் சுண்டைக்காய் பறிக்கச் சென்ற வயதான தம்பதி காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- பவானிசாகர் அருகே வனப்பகுதிக்குள் சுண்டைக்காய் பறிக்கச் சென்ற வயதான தம்பதி காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது காராச்சிக்கொரை பூதிகுப்பம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நஞ்சன் (வயது 75), துளசியம்மாள் (வயது 70). வயதான தம்பதி. இவர்கள் இருவரும் சேர்ந்து தினமும் வனப்பகுதிக்குள் சென்று சுண்டைக்காய் பறித்து வருவது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று மாலை இருவரும் வழக்கம்போல விளாமுண்டி வனப்பகுதிக்கு உட்பட்ட சிங்கமலை வால்மொக்கை என்ற இடத்தில் சுண்டைக்காய் பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் புதர் மறைவில் நின்றிருந்த காட்டு யானை திடீரென இருவரையும் தும்பிக்கையால் தாக்கி மிதித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இருவரின் சத்தம் கேட்டு, அந்த பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்தபோது நஞ்சன், துளசியம்மாள் இருவரையும் தாக்கிய காட்டு யானை அதே பகுதியில் சுற்றித் திரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து விளாமுண்டி வனத்துறைக்கும், பவானிசாகர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத் துறையினர் மற்றும் போலீசார் காட்டு யானையை விரட்டிவிட்டு இருவரின் உடல்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து விளாமுண்டி வனத்துறையினரும், பவானிசாகர் போலீசாரும் விசாரிக்கின்றனர்.