ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பில் தீ
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலுவலரின் ஜீப் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலுவலரின் ஜீப் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவ்வலுவலகத்தில் செயற்பொறியாளராக சண்முகவடிவு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஈரோடு ஆர்கேவி சாலையில் உள்ள நேதாஜி காய்கறி வணிக வளாக திறப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
ஓட்டுநர் ஜீப்பை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, ஜீப்பின் முன்புற பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து, ஜீப்பின் முன் பகுதியில் தீ பிடித்து மளமளவென எரியத் துவங்கியது.
இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஜீப்பின் முன் புற பகுதி முழுமையாக தீயில் எரிந்து நாசமானது.
பேட்டரியில் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.