கொடுமுடி பகுதியில் பலத்த மழை; 10 மிமீ மழை பதிவு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் நேற்று 10.20 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கொடுமுடி பகுதியில் நேற்று 10.20 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. மழையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், மழைப்பொழிவு காரணமாக கொடுமுடி பகுதியில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொடுமுடி பகுதியில் 10.20 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.