தந்தையின் உடலை ஜமுக்காளத்தால் சுற்றி கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த மகன்..!
ஈரோடு அருகே தந்தையின் கை, கால்களை கட்டி உடலை ஜமுக்காளத்தால் சுற்றி கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த மகனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு அருகே தந்தையின் கை, கால்களை கட்டி உடலை ஜமுக்காளத்தால் சுற்றி கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த மகனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர் காலிங்கராயன் நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் நந்தகுமார் (வயது 62). இவரது, மனைவி கிருஷ்ணாபாய். இவர்களது மகன் மோத்தி (வயது 44). இந்நிலையில், இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. மேலும், கடந்த மூன்று நாட்களாக வீடும் பூட்டப்பட்டிருந்ததால் அப்பகுதியினர் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, ஹாலில் கட்டிலுக்கு அடியில் ஜமக்காளத்தில் சுற்றப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டு நந்தகுமார் அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்து மோப்ப நாய் போலீசார், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
இந்நிலையில், மகன் மோத்தியிடம் சித்தோடு போலீசார் நடத்திய விசாரணையில், நந்தகுமாருக்கும் அவரது மனைவி கிருஷ்ணாபாய்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் மோத்தி தனது தாய் கிருஷ்ணாபாயை ஜவுளி நகரில் வாடகைக்கு வீட்டில் தங்க வைத்துள்ளார். மேலும் அவருக்குத் தேவையான மளிகை பொருட்களை வாரம் ஒருமுறை வாங்கிக் கொடுத்ததோடு வீட்டை பூட்டி விட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த வாரம் உயிரிழந்த நந்தகுமாரை என்ன செய்வதென தெரியாமல் கை கால்களை கட்டிப் போட்டும், தனது தந்தை மீண்டும் எழுந்து வருவார் என நம்பிக்கையில் மகன் மோத்தி தொடர்ந்து பராமரித்து வந்துள்ளதும் கை, கால்கள் வீங்கியதால் வீக்கத்தை குறைக்க பெட் சீட்டை வைத்து கட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து, ஜவுளிநகர் சென்ற பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி தலைமையிலான போலீசார் அங்கு பூட்டப்பட்டு இருந்த வீட்டின் கதவை உடைத்து. உடல் மெலிந்து காணப்பட்ட கிருஷ்ணாபாயை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சித்தோடு போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.