ஆன் லைன் ரம்மியில் ரூ.10 லட்சம் இழப்பு : தனியார் வங்கி அதிகாரி ரயிலில் பாய்ந்து தற்கொலை

பைல் படம்
நாமக்கல்,
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). அவர், ஈரோடு மாவட்டம், முத்தூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு கவிதா (22) என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். செல்போன் மூலம் ஜெயகுமார் அடிக்கடி ஆன்லைனில் ரம்மி விளையாடுவது வழக்கம். அதில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் அவர் இழந்துள்ளதாக தெரிகிறது. இதையொட்டி தனது மனைவியிடம், ரூ. 2 லட்சம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், தனது தந்தை பிறந்த ஊரான, நாமக்கல் மாவட்டம், நெய்க்காரன்பட்டி அருகே உள்ள பாண்டியன் நகர் என்ற இடத்திற்கு தனது டூ வீலரில் வந்த ஜெயகுமார் தனது வண்டியை நிறுத்திவிட்டு, ரயில்வே டிராக்கில் காத்திருந்தார். மாலை 3 மணிக்கு, சேலம் - மயிலாடுதுறை ரயில் அவ்வழியாக வந்தது. அப்போது ரயிலில் பாய்ந்து ஜெயகுமார் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இரண்டாக துண்டானது. தகவல் அறிந்த, சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நாமக்கல், சேலம் ரோட்டில் உள்ள, தனியார் வங்கி அதிகாரி ஒருவர் கடந்த 2 மாதம் முன்பு நாமக்கல் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது 2வது தனியார் வங்கி துணை மேலாளர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu