ஈரோட்டில் செங்குந்தர் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஈரோட்டில் செங்குந்தர் பொறியியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
HIGHLIGHTS
நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஈரோட்டில் செங்குந்தர் பொறியியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, நடைபெற இருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 2024-ஐ முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதி செய்யும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் செங்குந்தர் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மேட்டூர் சாலை வழியாக சென்று அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் நிறைவு பெற்றது. இதில் கல்லூரியின் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக நடந்து சென்றனர். ஊர்வலத்தின் முடிவில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதில், கல்லூரியின் முதல்வர் வெங்கடாசலம், தலைவர் அண்ணாதுரை, தாளாளர் கமலமுருகன், செயலாளர் தங்கராஜூ, பொருளாளர் செந்தில்குமார், துணைத்தலைவர்கள் சுவாமிநாதன், பாலுசாமி, இணைச் செயலாளர்கள் தர்மலிங்கம், பூரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.