ஆர்ப்பாக்கம் ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி! பாலாலயத்துடன் தொடங்கியது
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ நல்லழகி உடனுறை ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
HIGHLIGHTS
கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் மட்டுமில்லாது பல்வேறு கிராம கோவில்களும் மிகவும் புகழ் பெற்றது.
அவ்வகையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வாலாஜாபாத் வட்டம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலின் திருப்பணி நடைபெற கோரி திருக்கோயில் தக்கார் மற்றும் கிராம பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி அரசு விதிகளுக்கு உட்பட்டு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். ஆர்பாக்கம் ஸ்ரீதிருநல்லழகி சமேத உடனுறை ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் பாலாலயம் இரண்டு கால யாகசாலை பூஜையுடன் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை இரண்டு யாகசாலைகள் அமைக்கப்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட திருக்குடங்கள் நிர்மாணிக்கப்பட்டு முதல் கால யாக சாலை பூஜை நிறைவு பெற்றது.
இன்று காலை ஆறு மணிக்கு சிவாச்சாரியார் ராஜா குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் இரண்டாம் கால யாகசாலை பூஜை பூர்ணகதியுடன் நிறைவு பெற்று திருக்குடம் புறப்பட்டு திருக்கோயிலை வலம் வந்து, அத்தி மரத்தில் அமைக்கப்பட்ட திருவாளீஸ்வரருக்கு சிறப்பு புனித நீர் ஊற்றி யாகசாலை பூஜை சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் திருவாலீஸ்வரர் எழுந்தருள சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோயில் செயல் அலுவலர் கதிரவன், ஆய்வர் திலகவதி, ஆடிட்டர் ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் பரசுராமன், ரவி, டிகேஎஸ் சீனுவாசன் , வார்டு உறுப்பினர் மலர்வண்னன், மாதவன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னப்பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் அரசு விதிகளை பின்பற்றி முறையாக திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைவருக்கும் வேண்டுகோள் விடப்பட்டது.
தற்போது இந்து சமய அறநிலையத்து சார்பில் இதனை ஒட்டிய மாகறல், இளையனார்வேலூர் , வயலக்காவூர் மற்றும் உத்திரமேரூர் அம்மன் திருக்கோயில் உள்ளிட்டவைகளை திருப்பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.