மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக சிறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன் கலந்து கொண்டார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் 504 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 41.6 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு மகளிர் திட்டம் சார்பில் செயல்பட்டு வருகிறது.
மேலும் மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு அளித்தல் அதற்கான கடன் அளித்தல் என பல்வேறு வகையில் செயல்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 7419 மகளிர் சுய உதவி குழுக்களும் நகர் புறப்பகுதிகளில் 1847 மகளிர் சுய உதவி குழுக்கள் என மொத்தம் 9266 குழுக்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 98 பெண்கள் உறுப்பினராக உள்ளனர்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் அளிக்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழக சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 504 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 41 கோடியே 61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதன் மூலம் 6037 பயனாளிகள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்விழாவில் மகளிர் திட்ட இயக்குனர் கவிதா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் ஒன்றிய குழு தலைவர்கள் தேவேந்திரன், கருணாநிதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் , மகளிர் திட்ட அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.