ஆபத்தான நிலையில் சோழவந்தான் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் கட்டிடம்
இடிந்து விழும் நிலையில் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர். விபத்து ஏற்படும்முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
HIGHLIGHTS
மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும், விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தானில் உள்ள அரசு மருத்துவமனையானது, தினந்தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் மற்றும் ஐம்பதுக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த மருத்துவமனை முன் நுழைவாயில் பகுதியில் உள்ள மரம் வளர்ச்சியடைந்து விரிவடைந்து சுற்றுச்சுவர் மீது சாய்ந்துள்ளது.
இதனால் சுவரில்விரிசல் ஏற்பட்டுள்ளது . மருத்துவமனைக்கு அதிகப்படியான பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் தினசரி வந்து செல்வதால் எந்நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும், இந்த சுற்றுச்சவருக்கு அருகிலேயே மருத்துவமனைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதால் ,எந்த நேரத்திலும் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், அவசர சிகிச்சைக்கு வரும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ஆகையால், பொதுமக்களின நலன் கருதி பழைய சுற்றுசுவரை இடித்து விட்டு ,புதிய சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.