நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் முகாம் துவக்கம்
நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு படிக்கும் பள்ளியிலேயே ஆதார் முகாம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு படிக்கும் பள்ளியிலேயே ஆதார் முகாம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறையில் மாணவ, மாணவிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கல்வி கற்கும் சூழ்நிலையை உருவாக்கி, அவர்களுக்கான அனைத்து தேவைகளையும் அரசு செய்ய வேண்டும், என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவை மாவட்டத்தில், இன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான, பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு முகாமை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியர் ஆதார் பதிவு செய்ய, புதுப்பிக்க, நிரந்தர ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டிய நிலையினை தவிர்த்து, அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே எல்காட்டின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டு மூலம் ஆதார் எண் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலை மேற்கொண்டு பயன்பெற இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிவுறுத்தலின் பேரில், டிஆர்ஒ சுமன், நாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியகளுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு முகாமினை தொடங்கி வைத்தார். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1,16,826 மாணவ, மாணவிகளில் ஆதார் எண் இல்லாத 4,483 மாணவ, மாணவிளுக்கு புதிய ஆதார் அட்டை எடுக்கவும் மற்றும் புதுப்பித்தல் தேவையுள்ள மாணவ, மாணவிகளுக்கு புதுப்பித்தல் மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ஆர்டிஓ (பொ) முத்துராமலிங்கம், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.