ப.வேலூர் அருகே பகவதியம்மன் கோயில் திருவிழா: தீக்குண்டத்தில் இறங்கிய பக்தர்கள்
Bhagavathiamman festival நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே கு.அய்யம்பாளையம் பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
HIGHLIGHTS
Bhagavathiamman festival
கு.அய்யம்பாளையம் பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த31-ஆம்தேதி சனிக்கிழமை, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர் .அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பூ சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 1-ஆம் தேதி திங்கட்கிழமை வடிசோறு பூஜை நடைபெற்றது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தீக்குண்டத்தில் இறங்கும் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருந்த தீக்குண்டத்தில் ஆண் மற்றும் பெண் பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக பகவதி அம்மனுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மன் முன் படையலிட்டு பூஜை செய்தனர். இரவு பெண்கள் ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்து அம்மன் சன்னதியில் பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து வான வேடிக்கை நடைபெற்றது. இன்று புதன்கிழமை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.