சட்டசபை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் வாய்ப்பு உள்ளது பாஜக மாநில துணைத்தலைவர் பேட்டி
Bjp State Vice President Interview சட்டசபை தேர்தலுக்குப் முன்பே, பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகி வருகிறது என பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் கூறினார்.
HIGHLIGHTS
Bjp State Vice President Interview
நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில், நாமக்கல் பார்லி. தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநிலத் துணைத் தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டர் கே.பி. ராமலிங்கம் கலந்துகொண்டு, வருகின்ற லோக்சபா தேர்தலில் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளர் டாக்டர் ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வருகின்ற லோக்சபா தேர்தலுக்காக, பாஜக தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாவட்டம் முழழுவதும் பயிலரங்குகள், கலந்தரையாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தலை முன்னிட்டு, லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிவாரியாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஏற்கனவே இடைத்தேர்தலில் அவர்கள் இந்திய தேர்தல் கமிஷனின் வழிமுறைகளை பின்பற்றாமல் முறைகேடுகளில் ஈடுபட்டனர். வர உள்ள லோக்சபா தேர்தல் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக தாய்மார்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்காக வாக்களிக்க தயாராகிவிட்டனர். மேலும் தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்பதை படித்த இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் உணர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் பிஜேபியின் தேவை மிகுந்த அவசியமானது என்பதை உணர்ந்துள்ளனர். எம்ஜிஆர் தனிக் கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்தித்தபோது எந்தவிதமான எழுச்சி இருந்ததோ அதேபோல, தமிழகத்தில் பாஜக அருதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் துறைமுகம் முதல் கன்னியாகுமரி வரை 39 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பவர்களும், தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்புபவர்களும் இந்த கூட்டணிக்கு வரலாம்.
நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் வராமலேயே பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நிலை கூட வரலாம். அதன் முன்னோட்டமாகத்தான் பல்வேறு கட்சிகளை சேர்ந்த, முன்னாள் நிர்வாகிகளும் இப்போது பாஜகவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். திமுகவில் இருந்தும், அதிமுகவில் இருந்தும் இன்னும் பலர் பாஜகவுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் அடிப்படையில்தான் சட்டசபைத் தேர்தல் வராமலேயே தமிழகத்தில் பிஜேபி ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறோம். ஊழலற்ற ஆட்சி நேர்மையான ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புவர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.
நாட்டிற்கு தேசியமும் ஆன்மிகமும் உகந்தது என்ற உணர்வுக்கு தமிழக மக்கள் வந்துள்ளதால், தமிழகத்தில் எந்த நேரத்திலும் பிஜேபி ஆட்சி அமைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது. உலகில் ஜனநாயக மாண்புகள் தோன்றுவதற்கு முன்பே அதனை உலகிற்கு அறிவித்து முன்உதாரணமாக ஆட்சி செய்த ராஜராஜசோழன் உள்ளிட்ட சோழ பரம்பரையின் நேர்மையான ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். லோக்சபா தேர்தலில் இரண்டு கூட்டணிதான் அமையும். ஒன்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஒரு அணியும், அதற்கு எதிராக, பொருந்தாத இண்டியா கூட்டணியும் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.