ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளில், ரூ.11.67 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ராசிபுரம் நகராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் பழைய பஸ் நிலையத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் அடுக்குமாடி வாகனம் நிறுத்தும் இடம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தெடர்ந்து, ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் கோனேரிப்பட்டி ஏரி தூர்வாரும் பணிகளை அவர் பார்வையிட்டார். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர், திருச்செங்கோடு நகராட்சி, அனிமூரில் ரூ.2.31 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு, கிடங்கில் மட்கும் மற்றும் மட்காத குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதையும், மட்கும் குப்பைகளான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து நுண் உரம் தயாரிக்கப்படுவது குறித்தும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவது குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட, கொல்லப்பட்டியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டும் பணி, ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு மலை அடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணி மற்றும் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் நெசவாளர் காலனி, நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதியதாக 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமானப் பணி என மொத்தம் ரூ. 11.67 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று நலத்திட்டப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.