‘பொங்கல் பரிசு வேண்டாம்’- மோகனூர் வளையப்பட்டி பகுதி மக்கள் அறிவிப்பு
பொங்கல் பரிசு வேண்டாம் என சிப்காட் வருவதை எதிர்க்கும் மோகனூர் வளையப்பட்டி பகுதி மக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
HIGHLIGHTS
மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, விவசாயிகள் தமிழக அரசின் பொங்கல் பரிசை புறக்கணித்து, தங்கள் வீடுகளுக்கு முன்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி அதற்கான நிலத்தை, அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். அப்பகுதியில் தொழிற்பேட்டை அமைந்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை அரசு கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒருங்கிணைந்து சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை துவக்கி, இதுவரை 48 போராட்டங்களை நடத்தியுள்ளனர்.ஆனால் தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்தவித பதில் அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்தநிலையில், சிப்காட் எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பின் பேரில், மோகனூர் தாலுகா வளையப்பட்டி, என்.புதுப்பட்டி,அரூர், பரளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், தமிழக அரசு வழங்கும் ரூ. 1,000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பினை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு முன்பு, பொங்கல் பரிசை புறக்கணிக்கிறோம் என்ற நோட்டீசையும் ஒட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும் வருகின்ற பொங்கல் பண்டிகை தினத்தன்று தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி தங்களது வீடுகளில் கருப்பு பொங்கல் வைப்போம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.