சட்டத்திற்கு புறம்பாக தனியார் கல் குவாரிக்கு அனுமதியைக் கண்டித்து விநோத ஆர்ப்பாட்டம்
Namakkal news- சட்டத்திற்கு புறம்பாக, தனியார் கல் குவாரிக்கு அனுமதி வழங்கிய அதிகாரியைக் கண்டித்து, பாராட்டு விழா என்ற பெயரில் விநோத ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- சட்டத்திற்கு புறம்பாக, தனியார் கல் குவாரிக்கு அனுமதி வழங்கிய அதிகாரியைக் கண்டித்து, பாராட்டு விழா என்ற பெயரில் விநோத ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருசெங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கோக்கலை கிராமம் எளையாம்பாளையம் நெய்க்காரம்பாளையம் பகுதியில், கல் குவாரி அமைக்க தனியாருக்கு சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த வாரம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் குடியிருப்பு வீடுகள், பசுமைவீடு உட்பட கிராம கணக்கில் இருப்பதை மறைத்து சட்ட விரோதமாக கல்குவாரிக்கு அனுமதி அளித்த அதிகாரிகளைக் கண்டித்தும், பல மனுக்கள் அளித்தும் அதனை ஏற்காமல் பொய்யான சான்று வழங்கிய பிடிஓவிற்கு பாராட்டு விழா என்ற விநோதப் போராட்டத்தை கோக்கலைப் பகுதி பொதுமக்கள் எலச்சிபாளையம் பிடிஓ அலுவலகம் முன்பு நடத்தினார்கள்.
குவாரி அமைந்துள்ள பகுதியில் இருந்து, 300 மீட்டருக்குள் 4 வீடுகள் உள்ளதை மறைத்தும், அரசு சார்பில் 200 குடும்பங்களுக்கான ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருப்பதை மறைத்தும், பல வீட்டு மனைகள் உள்ளதை மறைத்தும் சான்று அளித்த அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் பாராட்டு விழா எனக்கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் எலச்சிபாளையம் பிடிஓ மகிமைதாசனிடம் இது குறித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தவறாக சான்று வழங்கியதை ரத்து செய்து, தனியார் கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் என தெரிவிக்கபட்டது. போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர் செந்தில்குமார், கவுன்சிலர் சுரேஷ். சிபிஎம் ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், தேவராஜன், சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் லத்துவாடி பஞ்சாயத்து துணை தலைவர் பூசன் நன்றி கூறினார்.