Government School Students Free Cycle மாவட்டத்தில் 11,110 பள்ளி மாணவர்களுக்கு ரூ.5.36 கோடி மதிப்பில் விலையில்லா சைக்கிள் வனத்துறை அமைச்சர் தகவல்
Government School Students Free Cycle நாமக்கல் மாவட்டத்தில், 11,110 பள்ளி மாணவ மாணவிகளுக்கு, ரூ. மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
HIGHLIGHTS
Government School Students Free Cycle
நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். ராஜ்சயபா எம்.பி. ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 150 மாணவர்களுக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 342 மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, பள்ளிக் கல்வித்துறையில் மாணவ, மாணவியர் தொடர்ந்து கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் பல புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். மாணவ, மாணவியர் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே சென்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பை வழங்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இல்லம் தேடிக் கல்வி திட்டம், மாணவ, மாணவியரின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கு எண்ணும் எழுத்தும் திட்டம், உயர்கல்வி பயிலுவதற்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு என மாணாக்கர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். மேலும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவியர் உயர்கல்வி பயில புதுமை பெண் திட்டம் மூலம் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 15 வட்டாரங்களை சேர்ந்த 103 பள்ளிகளில் பயிலும் 5,206 மாணவர்கள், 5,904 மாணவிகள் என மொத்தம் 11,110 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.5.36 கோடி ஆகும். தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி, மாணவ மாணவிகள் நன்றாக கல்வி பயின்று சமூகத்தில் உயர்நிலையை அடைந்திட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சித் கலாநிதி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பாலகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.