பரமத்திவேலூர் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
பரமத்திவேலூர் சக்திநகர் விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள, ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
HIGHLIGHTS
பரமத்திவேலூர் சக்திநகர் விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள, ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சக்தி நகரில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய வளாகத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜேயந்தியை முன்னிட்டு காலையில், ஆஞ்சநேயருக்கு 27 வகையான மூலிகை மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. வடை மாலை அலங்காரத்துடன் ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ஆஞ்சநேயர் கவசங்களை பாடியும், ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராமஜெயம் என்று பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பியும் சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஏற்பாடுகளை சக்தி நகர் சக்தி விநாயகர் கோயில் பரம்பரை தர்மகர்த்தா வக்கீல் மதிவாணன், ரேணுகா மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.