எம்ஜிஆர் ரசிகன் புதிய சினிமாப்படம் தயாரிப்பு; நாமக்கல்லில் பூஜை
Namakkal news-கோபி காந்தி நடிக்கும் எம்.ஜி.ஆர் ரசிகன் என்ற புதிய சினிமாபடத்திற்கான பூஜை, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்றது.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாளில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய தலைவர் கோபி காந்தி நடிக்கும் எம்.ஜி.ஆர் ரசிகன் என்ற புதிய சினிமாபடத்திற்கான பூஜை, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றது.
நாமக்கல் நகரைச் சேர்ந்தவர் கோபிகாந்தி, ஆர்எஸ்ஜி சமூக சேவை மையத்தின் தலைவரான இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். ஏற்கனவே பல்வேறு குறும்படங்களையும், 4 சினிமாப் படங்களையும் தயாரித்து அவரே நடித்துள்ளார். அவரது, ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக 5வது படமாக எம்ஜிஆர் ரசிகன் என்ற படம் தயாரிக்கப்படுகிறது. அந்த படத்தை அவரே டைரக்ட் செய்து, அவரே காதாநாயகனாக நடிக்க உள்ளார். எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆர் ரசிகர் படத்துக்கான பூமி பூஜை நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற படத் தயாரிப்பு, துவக்க விழாவில் நடிகர் கோபிகாந்தி கூறியதாவது:
எம்ஜிஆர் ரசிகனான நான், இந்த படம் முழுவதும் எம் ஜி.ஆரின் தீவிர ரசிகனாக நடிக்க உள்ளேன். அதற்காக சுமார் 5 ஆயிரம் எம்.ஜி.ஆர் ரசிகர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் எம்ஜிஆரின் குணநலன்களை கேட்டறிந்து கதை எழுதி, திரைக்கதை அமைத்துள்ளேன். இன்றைய காலத்தில் எம்.ஜி.ஆர் ரசிகராக இருக்கும் ஒரு இளைஞன் எப்படி இருப்பான் என்பதை பொழுதுபோக்காகவும், சமூக சிந்தனையுடனும் சொல்ல உள்ளேன். அனைவருக்கும் பிடிக்கும் விதமாக படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். படத்தின் ஒளிப்பதிவாளராக குமரன், எடிட்டராக கோகுல் கிருஷ்ணன் ஆகியோர் பணிபுரிகின்றனர் என்று கூறினார்.
சினிமாப்பட பூஜை விழாவில், படத்தில் நடிக்க உள்ள உள்ள நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் டிசைனர் வெங்கட், மக்கள் தொடர்பாளர் அஸ்வத் சரவணன், தயாரிப்பு மேலாளர் சக்தி சரவணன், சினிமாப்பட பைனான்சியர்கள் புதுச்சேரி வடிவேல், கேரளா குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.