நாமக்கல்லில் பிளஸ் 2 பொது தேர்வு துவக்கம் தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு
Namakkal Dist Plus Two Exam நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
Namakkal Dist Plus Two Exam
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கியது. வருகிற 22ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தேர்வினை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட, 85 தேர்வு மையங்களில் 8,479 மாணவர்களும் 8,932 மாணவிகளும் என மொத்தம் 17,411 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 5 தேர்வு மையங்களில் தனித்தேர்வர்களாக 286 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் 112 பேரில் 94 மாணவர்களுக்கு, சொல்வதை எழுதுவதற்கு உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேல்நிலைப் பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில், 85 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 85 துறை அலுவலர்கள், 3 கூடுதல் துறை அலுவலர்கள், 163 பறக்கும் படை உறுப்பினர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் மற்றும் 1,211 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர். நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, பிளஸ் 2 தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கலந்துகொண்டார்.