நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் சிலை வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறப்பு
Namakkal Kavignar Statue Inauguration நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில், ரூ. 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கவிஞர் ராமலிங்கம்பிள்ளை சிலையை, தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
Namakkal Kavignar Statue Inauguration
நாமக்கல் மாவட்டம், மோகனூரில், 1888 அக். 19ல், வெங்கட்ராமபிள்ளை, அம்மணி அம்மாளுக்கு, 8வது மகனாக பிறந்தார் ராமலிங்கம். பெற்றோர் அவருக்கு, கருப்பண்ணசாமி என பெயர் சூட்டி அழைத்தனர். நாமக்கல்லில் குடியேறிய பின், நாமக்கல்லில் தொடக்கக் கல்வியும், கோவை நகரில் உயர்க் கல்வியும், திருச்சி நகரில் கல்லூரி கல்வியும் கற்றுத்தேர்ந்தார். சிறந்த ஓவிய கலைஞராகவும் திகழ்ந்தார்.
1912ல், 5ம் ஜார்ஜ் மன்னர் உருவத்தை வரைந்து, மன்னரால் பரிசும், பாராட்டும் பெற்று, அவருடன் சமமாக விருந்துண்ட பெருமை கவிஞர் ராமலிங்கத்துக்கு உண்டு. நாமக்கல் நாகராஜர் அய்யரின் தொடர்பால், விடுதலை இயக்கத்தில் இணைந்து, 1932ல் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று, ஓராண்டு சிறையில் இருந்தார். ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது...’, தமிழன் என்றொரு இனமுண்டு, கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடி, சுதந்திர உணர்வை ஏற்படுத்தியவர், தேசிய கவிஞர் ராமலிங்கம்.
கவிஞர் ராமலிங்கம் 1906ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். 1914ல், திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளர் மற்றும் கரூர் மாவட்ட வட்டாரத் தலைவராகவும், 1921 முதல், 1930 வரை, நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவராகவும், 1953ம் ஆண்டு, சாகித்ய அகாடமி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.
1971ல் பத்ம பூஷன் விருதும், 1956 மற்றும் 1962ல் சட்டசபை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். 1949ல் சென்னை மாகாண அரசவை கவிஞராகவும் பதவி வகித்த கவிஞர், பல்வேறு பொறுப்புகளில் பாராட்டும்படி பணியாற்றினார். அவர், 1972ம் ஆண்டு ஆக. 24ல் இயற்கை எய்தினார்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் புகழையும், நினைவையும் போற்றிடும் வகையில், நாமக்கல் நகரில் உள்ள கவிஞர் ராமலிங்கம் தெருவில், அவர் வாழ்ந்த இல்லம், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையினால் நினைவில்லமாக மாற்றப்பட்டு, 2000ம் ஆண்டு, அக். 21ல், திறந்து வைக்கப்பட்டது. இந்த இல்லத்தில், தமிழக அரசின் பொது நூலகத்துறை சார்பில், கிளை நூலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு, அவரது சிலை நிறுவ வேண்டும் என்பது பல்வேறு அமைப்பினரின் கோரிக்கை. அதையடுத்து, ரூ. 20 லட்சம் மதிப்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கத்தின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாமக்கல் கவிஞர் சிலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில், எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர், கவிஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கவிஞரின் வாரிசுதாரர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.