உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மரியாதை
உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா மாலை வைத்து மரியாதை செய்தார்.
HIGHLIGHTS
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு, மாவட்ட கலெக்டர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார்.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும், அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை தானமாக கொடுத்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின், இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகில் உள்ள, சிங்கிலிப்பட்டி கிராமம், பொய்யேரியை சேர்ந்தவர் சின்னையா, மளிகை கடை உரிமையாளர். இவரது மகன் ராஜ்குமார் (41), சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. இதையொட்டி, சிங்கிலிப்பட்டியில் நடைபெற்ற, இறுதிச்சடங்கில் மாவட்ட கலெக்டர் உமா கலந்துகொண்டு, ராஜ்குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில், நாமக்கல் தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.