நாமக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்
Pongal gift set provided by Namakkal Minister Madivendan
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் 5.41 லட்சம் குடும்பங்களுக்கு, ரூ. 60 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் உத்தரவின்பேரில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக, அரிசி வாங்கும் தகுதியுள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், ரூ. 1000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு, மேலும் இலவச வேஷ்டி சேலை ஆகியன வழங்கப்படுகிறது. இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, நாமக்கல் நகராட்சியில் உள்ள முல்லை நகரில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு வரவேற்றார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.
அப்போது அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-
தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் நாமக்கல் மாவட்டத்தில் அரிசி வாங்கும் தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்க பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 813 ரேசன் கார்டுதாரர்கள் இந்த பரிசுத்தொகுப்பு வழங்க தகுதி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் உள்ள 945 ரேஷன் கடைகள் மூலம் இந்த பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
மேலும் தகுதியுள்ள 4 லட்சத்து 7 ஆயிரத்து 22 பேருக்கு விலையில்லா சேலைகளும், 3 லட்சத்து 93 ஆயிரத்து 241 பேருக்கு, இலவச வேஷ்டிகளும், பொங்கல் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் வழங்கக்கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பின் மொத்த மதிப்பு ரூ. 60 கோடியே 7 லட்சம் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன், நகராட்சி தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.