நாமக்கல்லில் பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் பதிவு செய்தல் குறித்த கருத்தரங்கம்
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் பதிவு செய்தல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், மற்றும் திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், இணைந்து நடத்திய பயிர் ரகங்கள் பாதுகாப்பு, பதிவு செய்தல் மற்றும் உழவர்கள் உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
திருவனந்தபுரம், முதுநிலை விஞ்ஞானி முருகேசன் வரவேற்றார், ஹைதராபாத் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு நிறுவன இயக்குனர் மீரா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கருத்தரங்கை துவக்கி வைத்தார். மேலும் பாரம்பரிய ரகங்களை அறிவியல் ரீதியாக அதன் குணாதிசயங்களை ஆராய்ந்து, பதிவுசெய்ய தேவையான முழு முயற்சியினை மேற்கொள்ள வேண்டும் என கூறினார். சிடிசிஆர்ஐ இயக்குனர் பைஜூ, நிகழ்ச்சியின் போது புதிய ரக மரவள்ளிகிழங்கு வகைகள் குறித்து பேசினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர் முருகன், கால்நடைமருத்துவக்கல்லூரி முதல்வர் செல்வராஜூ ஆகியோர், கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படக்கூடிய மரவள்ளிகிழங்கு திப்பி, வெள்ளைத் திப்பி, கப்பி, மரவள்ளி தோல், உலர் மரவள்ளி இலை மற்றும் தண்டு தீவனப்பொருட்கள் குறித்து பேசினர்..
நிகழ்ச்சியில் நாரைக்கிணறு, கொல்லிமலை, நாமகிரிபேட்டை, கணபதிபாளையம், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய வட்டாரங்களில் உள்ள மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயிகள் தங்கள் வயலில் தற்போது பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி ரகங்களான முள்ளுவாடி, கருப்பு தாய்லாந்து, குங்குமரோஸ்,வெள்ளை தாய்லாந்து, ஸ்ரீ அதுல்யா, ஸ்ரீகாவேரி, போன்ற ரகங்களை கண்காட்சியில் பார்வைக்காக வைத்திருந்தனர்.
புதுடில்லி பி.பி.வி.எப்.ஆர.ஏ. சட்ட ஆலோசகர் ராஜ்கணேஷ், பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் உழவர்கள் உரிமை சட்டம் மற்றும் உழவர்களின் பயிர் ரகங்களை பதிவுசெய்தல் குறித்து விளக்கி கூறினார். டாக்டர் முருகேசன் புதியதாக வெளியிடப்பட்ட கிழங்கு ரகங்கள் மற்றும் பாரம்பரிய கிழங்குவகை ரகங்களை பதிவு செய்வது குறித்து பேசினார்.
தொழில் நுட்ப நிபுணர்கள் ஜெகநாதன், அம்பாசங்கர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பேசினார்கள். நெல் மற்றும் மரவள்ளி பயிர்களில் டிரோன் மூலம் நானோ யூரியா மற்றும் நுண்ணூட்டச் சத்து தெளித்தல் குறித்த செயல் விளக்கங்கள் கணபதிபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. முடிவில் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் நன்றி கூறினார்.