சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம்
Sipcot Plan Black Pongal Agitation - நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கருப்பு பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
Sipcot Plan Black Pongal Agitation
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி அதற்கான நிலத்தை, அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். அப்பகுதியில் தொழிற்பேட்டை அமைந்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை அரசு கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒருங்கிணைந்து சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை துவக்கி, இதுவரை 48 போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை அரசிடம் இருந்து எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்தநிலையில், சிப்காட் எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பின் பேரில், மோகனூர் தாலுகா வளையப்பட்டி, என்.புதுப்பட்டி,அரூர், பரளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொங்கல் நாளன்று, வளையப்பட்டி சிப்காட் அலுவலகத்தில் கருப்பு பொங்கல் வைத்து தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர். அப்போது சிப்காட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய முன்னேற்ற கழக தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். தமிழ்நாடு கொங்கு வேளாளர் பேரவை மாநில தலைவர் தேவராஜன், நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட விவசாய பிரிவு அமைப்பாளர் ரவிச்சந்திரன், பாஜக விவசாய அணி செயலாளர் ராதிகா, சிப்காட் எதிர்ப்பு இயக்க அமைப்பாளர் ராம்குமார், ரவிகுமார் உள்ளிட்ட திரளான விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.