கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கே ஓட்டு: விமுக மாநில மாநாட்டில் முடிவு
Namakkal news- கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கே ஓட்டு என விமுக மாநில மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- முதலீட்டு பணத்தை திரும்ப பெற்றுத்தர தேர்தல் அறிக்கையில் வெளியிடும் அரசியல் கட்சிக்கே லோக்சபா தேர்தலில் ஓட்டுப்போடுவது என்றும் தவறும்பட்சத்தில், லோக்சபா தேர்தலை புறக்கணிப்பது என, விமுக மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாய முன்னேற்ற கழகம், பி.ஏ.சி.எல். முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சார்பில், முதலீடு மீட்பு மாநில மாநாடு, நாமக்கல் திருச்சி ரோட்டில் மேட்டுப்பட்டி அருகில் நடைபெற்றது.
விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் செல்ல ராசாமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:
மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. நெல் கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக, குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செய்யும் செலவுகளை கணக்கிட்டு, குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்.
உடல் மற்றும் குடும்ப ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் மதுமானக் கடைகளுக்கு தடைவிதித்து, தென்னை, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, கள்ளை உணவு பொருளாக அறிவித்து, கள் இறக்கி விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி அளிக்க எடுக்க வேண்டும். பி.ஏ.சி.எல்., நிறுவனத்தில் இந்தியா முழுவதும், 5.85 கோடி முதலீட்டாளர்கள், ரூ. 49 ஆயிரத்து 100 கோடி முதலீடு செய்துள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி முதலீட்டாளர்கள் ரூ. 10 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர். இந்த பணத்தை வட்டியுடன் சேர்த்து, 6 மாத காலத்துக்குள் வழங்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. முதலீட்டு பணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், களப்பணியாற்றி வேலை இழந்துள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்களுக்கு மாற்று வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, எந்த கட்சி, கொள்கை முடிவாக தேர்தல் அறிக்கையில் வெளியிடுகிறதோ அந்த கட்சிக்கே விவசாயிகள், பிஏசிஎல் களப்பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஓட்டுப் போடுவோம். தவறும் பட்சத்தில், லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகாவில், விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி, காற்று மாசுபட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் வீணாக சென்ற கடலில் கலக்கும் மழைநீரை சேமித்து, விவசாயத்திற்கு பயன்படுத்த போர்க்கால அடிப்படையில் காவிரி ஆற்றை தூர்வாரி, 20 கி.மீ. தூரத்திற்கு ஒரு மதகு அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.