நாமக்கல் பகுதியில் டிரான்ஸ்போர்ட் நகரம் அமைக்க பாடுபடுவேன்: அதிமுக வேட்பாளர் உறுதி..!
நாமக்கல் பகுதியில் டிரான்ஸ்போர்ட் நகரம் அமைக்க பாடுபடுவேன் என்று அதிமுக வேட்பாளர் உறுதி அளித்தார்.
HIGHLIGHTS
நாமக்கல்:
நான் வெற்றிபெற்று எம்.பியானால், நாமக்கல் தொகுதியில் டிரான்ஸ்போர்ட் நகரம் அமைக்கப் பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளர் தமிழ்மணி உறுதி கூறினார்.
நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, சங்ககிரி சட்டசபைத் தொகுதியை சேர்ந்த அரசிராமணி, தேவூர், வட்ராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஹா தமிழ்மணி திறந்த ஜீப்பில் சென்று வாக்கு இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுக்கேட்டு பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் ஈடுபட்டபோது பெண்கள் கூடிநின்று அவருக்கு வரவேற்பளித்தனர். அப்போது ஒரு மூதாட்டி, வேட்பாளர் தமிழ்மணியை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தூக்கி இடுப்பில் வைத்து வேட்பாளர் தமிழ்மணி அவருக்கு நன்றி தெரிவித்தார்.
பொதுமக்களிடம் ஓட்டுக்கேட்டு வேட்பாளர் தமிழ்மணி பேசியதாவது:
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த அம்மா கிளினிக், தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகளை அளித்தது அதில் எந்த வாக்குறுதியையும்முழுமையாக நிறைவேற்றவில்லை.
நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் ஏராளமானவர்கள் லாரித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டால் லாரித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். நானும் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்துவருவதால் அதில் உள்ள கஷ்டங்கள் எனக்கு நன்றாக தெரியும்.
நான் லோக்சபா தொகுதி தேர்தலில் வெற்றிபெற்று எம்.பியானால் லாரித்தொழில் முன்னேற்றத்திற்காக, நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் டிரான்ஸ்போர்ட் நகரம் உருவாக்கப்படும். இந்த நகரில் லாரித் தொழிலுக்கு தேவையான அனைத்து வேலைகளும் ஒரே இடத்தில் நடைபெறுவதற்கான தொழில்கூடங்கள் அமைக்கப்படும். ஒரு லாரி வாங்கினால் அந்த லாரியை ஒரே இடத்தில் கொண்டுவந்து அனைத்து வேலைகளையும் செய்துகொள்ளலாம்.
இதுபோன்ற டிரான்ஸ்போர்ட் நகரம் ஏற்கனவே ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ளது. தமிழகத்தில் லாரிகளுக்கு எப்.சி. செய்ய 3 எம் ஸ்டிக்கர் ஒட்டவேண்டும். தற்போதைய திமுக அரசு 3 கம்பெனிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, அந்த கம்பெனிகளின் ஸ்டிக்கர்களை மட்டுமே லாரிகளில் ஒட்டவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் ஃபைன் முறையில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று வருகிறது. 33 டோல்கேட்டுகள் காலாவதியாகியும் பணம் வசூல் செய்கின்றனர். நான் எம்.பியானால் பார்லி.யில் இது குறித்து பேசி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
சங்ககிரி எம்எல்ஏ சுந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினம், அரசிராமணி டவுன் பஞ்சாயத்து செயலாளர் காளியப்பன், தேவூர் டவுன் பஞ்சாயத்து செயலாளர் கிருஷ்ணன், சிவகுமாரன், கருப்பசாமி உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.