காவிரியில் தண்ணீர் பெற அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் தங்கமணி
தமிழகத்திற்கு கார்நடகா தரவேண்டிய, காவிரி தண்ணீரைப் பெற அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
HIGHLIGHTS
தமிழகத்திற்கு கார்நடகா தரவேண்டிய, காவிரி தண்ணீரைப் பெற அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டசபையில் தொகுதியில், நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் சங்ககிரி சட்டசபைத் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் சங்ககிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி, கூட்டத்திற்கு தலைமை வகித்து, நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை அறிமுகம் செய்து பேசியதாவது:
தற்போது தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது. மக்கள் திமுகவின் மீது எதிர்ப்பாக உள்ளனர். அந்த எதிர்ப்பு வாக்குகளை அதிமுகவிற்கு பெற்றுத் தருவதற்கு, அனைவரும் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால்தான் தமிழக உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க முடியும். அதேபோல் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த முடியும். நாம் காவிரி ஆற்றோரம் இருந்தாலும் தண்ணீர் கஷ்டத்தில் உள்ளோம்.
தமிழகத்திற்கான தண்ணீர் கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் இருந்து வரவேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில்தான் காவிரி உரிமைக்காக சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு பெற்றோம். 23 நாட்கள் அதிமுக எம்.பி.க்கள் பார்லிமெண்டை முடக்கி போராட்டம் நடத்தி தண்ணீர் பெற்றோம். ஆனால் இப்போது கர்நாடக முதலமைச்சர் தண்ணீர் தர மறுப்பதுடன், மேகதாது அணை கட்டுவோம் என்கிறார். 38 எம்பிக்கள் வைத்திருந்த திமுக தண்ணீர் உரிமை பெறுவதற்கு எதுவும் செய்யவில்லை. நடைபெற உள்ள பார்லி தேர்தலில் அதிமுக எம்.பிக்கள் அதிக அளவில் வெற்றிபெற்றால் தண்ணீர் உரிமையை கேட்டுப்பெற முடியும்.
நாமக்கல் தொகுதியில் இல்லாதவர்களின் வாக்குகள், வெளியூர் சென்றவர்களின் வாக்குகள், இறந்தவர்களின் வாக்குகள் என 50 சதவீதத்திற்கு மேல் நீக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதை தடுக்க இது போன்ற வாக்குகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை தருவதாக கூறி அரிசி, மளிகைப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்த்தியதையும், மின் கட்டணம், பால் விலை, வீட்டு வரி உயர்வு ஆகிவற்றை உயர்த்தியதையும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். நகை கடன் தள்ளுபடி கிடைக்க பெறாதவர்கள், கல்வி கடன் தள்ளுபடி வாக்குறுதியால் ஏமாந்தவர்கள், ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்க பெறாதவர்களை நேரில் சந்தித்து அவர்களை அதிமுவிற்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்.
கருணாநிதி சாராயக்கடையை திறந்து விட்டது போல், முதலமைச்சர் ஸ்டாலின் போதைப்பொருள் விற்பனையை திறந்து விட்டுள்ளார். இதன் காரணமாக திமுக ஆட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்பனை சரளமாக நடைபெற்று வருகிறது, தடை செய்யப்பட்ட லாட்டரி மீண்டும் விற்பனை செய்யப்பட்டு வருவதையும், அதற்காக லாட்டரி உரிமையாளர் மார்ட்டினிடம் ரூ. 509 கோடி தேர்தல் நிதியாக திமுக பெற்றதையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நாமக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளர் தமிழ்மணி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டம் என அவர் பேசினார்.
கூட்டத்தில் சங்ககிரி தொகுதி எம்எல்ஏ சுந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜா, காவேரி, சுபா, சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினம், மாவட்ட துணை செயலாளர் வேலுமணி உள்ளிட்ட திரளான அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.