உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி : அமைச்சர் துவக்கி வைத்தார்..!
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் :
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் சம்மேளனம் அறிவிப்பின் பேரில், 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதம் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரும் எச்.ஐ.வி இல்லா சமூகம் உருவாக தங்களின் அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ‘சமுகங்களுடன் சேர்ந்து எச்ஐவி, எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம் என்ற கருத்தினை மையக்கருத்தாக கொண்டு அனைத்து நிலையிலும் எச்ஐவி இல்லா சமூகம் உருவாக பங்களிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் எச்.ஐ.வி உள்ளோர்களை கண்டறிய அதிக அரசு சார்பில் நம்பிக்கை மையங்கள் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் எய்ட்ஸ் இல்லாத சமுதாயம் உருவாக எச்.ஐ.வி, எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்டிப்படையில், நாமக்கல் - மோகனூர் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். ராஜேஷ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பேரணியை துவக்கி வைத்துப் பேசினார்.
விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவர்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தலைமையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளர் செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.