பொட்டல்புதூர் கந்தூரி விழா: தீப விளக்கேற்றும் அனைத்து சமூகத்தினர்
பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக நடைபெற்ற தீப விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகத்திலுள்ள புகழ் பெற்ற தர்காக்களில் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்றாகும். இங்கு நடைபெறும் கந்தூரி விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.
குறிப்பாக சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தீப விளக்கு ஏற்றும் விழாவில் ஆயிரக்கணக்கான இந்துக்களும் விளக்கேற்றுவது கூடுதல் சிறப்பாகும்.
அதன்படி இந்தாண்டு கந்தூரி விழாவை யொட்டி கடந்த 16 -ந் தேதி கீழூர் ஜமாத்தின் நிறைபிறை கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான அரண்மனை கொடி ஊர்வலம் மற்றும் மேலூர் ஜமாத்தின் கொடி ஊர்வலம் நடைபெற்று கொடியேற்றம் நடத்தப்பட்டது.
இந்த கொடியேற்ற விழாவில் தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ள நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான அலங்கார தீப திடலில் அனைத்து மதத்தினரும் விளக்கேற்றும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான இந்துக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.