தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஐப்பசி கல்யாண திருவிழா துவக்கம்
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஐப்பசி கல்யாண திருவிழா தொடங்கியது.
HIGHLIGHTS
தென்காசி நகரில் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 10 நாட்கள் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா நடைபெறும்.
இதே போன்று இந்த ஆண்டிற்கான ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
முன்னதாக அதிகாலை கோவிலின் நடை திறக்கப்பட்டு கொடிமரத்தின் முன்பாக உலகம்மன் எழுந்தருளியதும், கொடிப்பட்ட ரதவீதி உலா நடந்தது. கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும் கொடிமரத்திற்கு மாவுப் பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பன்னீர், விபூதி, இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், கும்பநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கொடிமரத்திற்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.விழாவில் வருகிற 7ம் தேதி அன்று காலை உலகம் மன் திருத் தேரோட்டம் நடைபெகிறது.
திருவிழாவின் முக்கிய நாளான வருகிற 9-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு தெற்குமாசி வீதியில் வைத்து உலகம் மனுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் தபசு காட்சி நடைபெறுகிறது. அன்று இரவு கோவிலில் வைத்து சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
காசி விஸ்வநாத சுவாமி கோவிலின் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.