ஜெய்ஸ்ரீராம் தேசியக்கொடியை விண்ணில் பறக்க விட்டவருக்கு மலர்துாவி மரியாதை
12 Thousand Feet JaishriRam Flag ஜெய்ஸ்ரீராம் கொடி மற்றும் இந்திய தேசியக்கொடியை 12 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கவிட்டவருக்கு தேனி பொதுமக்கள் மரியாதை செய்தனர்.
HIGHLIGHTS
12 Thousand Feet JaishriRam Flag
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் ராஜ்குமார், (46). கடற்படையில் 15 ஆண்டுகள் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடற்படையில் பணியாற்றும் போது, ஸ்கைடைவிங் பயிற்றி பெற்றிருந்தார். தற்போது இவர் அமெரிக்காவில் ஸ்கை டைவிங் பயிற்சி வழங்கி வருகிறார். இந்திய கடற்படையில் பணியாற்றும் போதும், பணியில் இருந்து விலகிய போதும் இவர், இதுவரை மொத்தம் 15 ஆயிரம் முறை ஸ்கை டைவிங் செய்துள்ளார்.
கடந்த ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தாய்லாந்தில் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 15 அடி உயரம் கொண்ட ஜெய்ஸ்ரீராம் கொடியுடன் குறித்து கொடியை விண்ணில் பறக்கவிட்டார்.
அடுத்து ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினத்தன்றும், 12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து இந்திய தேசியக்கொடியை பறக்க விட்டார். இந்த சாதனைக்காக இவருக்கு மக்கள் சிறப்பு மரியாதை செய்ய முடிவு செய்தனர். இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் ஜீ, மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஜீ, சாயிபாபா அறக்கட்டளை தலைவர் ராஜன் உட்பட பலர் வியாழன் மாலை நடந்த சாயிபாபா கோயிலில் ராஜ்குமாரும், அவரது மனைவி ஷோபனாவும் நல்வாழ்வு வாழ சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
இந்த பூஜையில் தன் மனைவியுடன் ராஜ்குமாரும் பங்கேற்றார். இவருக்கு பரிவட்டம் கட்டி, பொன்னாடை, மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அங்கு வந்த பலநுாறு தம்பதிகள், பக்தர்கள் இந்தியாவின் பெருமையை உலகம் உணரச்செய்த, ராஜ்குமாரையும், அவரது மனைவியையும் மலர்துாவி வாழ்த்தினர்.
பின்னர் ராஜ்குமார் பேசியதாவது: நான் முருக பக்தன். ஆனால் இந்த சாயிபாபா கோயிலுக்கு வந்து வழிபட்ட பின்பே ஸ்கை டைவிங் செய்தேன். இங்கு எடுக்கும் முயற்சிக்கு பெரும் ஆசீர்வாதம் கிடைத்தது. எனது முயற்சிகளும் நல்லமுறையில் நடந்தது. நான் என் தேசத்திற்காக மட்டுமே இங்கு வழிபட்டேன். பொதுமக்களும் உங்களுக்காக எதுவும் கேட்க வேண்டாம். உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும். எனவே மனம் உருகி வழிபடுங்கள். நாட்டின் வளர்ச்சி சிறப்புக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.