வெளியில் தேடும் கடவுள் உள்ளே..! உயிரே கடவுள்.!
எத்தனையோ உயிரினங்கள் தோன்றும் இப்பூமியில் நாம் மனிதனாகப் பிறப்பது வரம். 'நான் நானாக' என்று எண்ணிப்பாருங்கள் பிறப்பின் அதிசயம் தெரியும்.
HIGHLIGHTS
இன்று நாம் அரசர்கள் காட்டிய வழிகளிலே தான் வாழ்ந்து வந்துகொண்டிருக்கின்றோம். அந்த ஞானிகள் காட்டிய வழியில் நாம் வாழவில்லை. நாம் சாப்பாடு சாப்பிடுகின்றோம். ஊறுகாயைக் கொஞ்சம் தொட்டுச் சாப்பிடுகிற மாதிரி லேசாகக் காட்டி ஞானிகளைப் பற்றி சொல்லி இருக்கின்றார்கள்.
பக்தி மார்க்கங்களில் கடவுள் நமக்குக் கொடுப்பார் என்ற நிலைகளில் தான் நாம் இருக்கின்றோமே தவிர நமக்குள் ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பது உயிர் என்ற நிலைகள் என்பது மறந்து விட்டது.
இந்த உடலுக்குள் இருக்கும் ஈசன் வெளியேறிவிட்டால், இந்த நீசமான உடலுக்கு வேலையே இல்லை. ஆனால், நீசமான உடலுக்குத்தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோமே தவிர நமக்குள் ஈசனாக இருக்கும் உயிரை நாம் மதிக்கவே இல்லை.
நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனும் நமது உயிரே. நாம் எண்ணுவதை நமக்குள் படைத்துக் கொடுப்பவனும் பிரம்மமாக இருப்பவனும் நமது உயிரே. நமக்குள் சிருஷ்டித்த நிலைகளை, விளைந்த நிலைகளை அவனுடன் அணைத்துச் சென்று அவனுடன் இயக்கமாக மாற்றிக் கொள்பவனும் அவனே. ஆகவே, அவனின்றி அணுவும் அசைவதில்லை. இவ்வாறு தான் ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்?
"அவனன்றி அணுவும் அசைவதில்லை" என்று எங்கேயோ கையைக் காட்டிக் கொண்டிருக்கின்றோம். நமக்குள் ஒரு அணு அசைகிறது என்றால் அவனின்றி அணுவும் அசைவதில்லை. நமக்குள் இந்த உயிர் தான் இத்தனை நிலைகளையும் இயக்குகின்றது. நாம் இதையே அறியமுடியவில்லை என்றால் அங்கே எங்கே எதை அறியப்போகின்றோம்? நமக்குள் ஆண்டு கொண்டிருப்பவன் அவன். "அவன் இல்லை என்றால் அங்கு அணு அசையுமோ?" என்று தான் அன்று ஞானிகள் சொன்னார்கள். இன்று நாம் "அவன்" என்று எங்கேயோ காணுகின்றோம்.
உயிரே கடவுள் - ஓம் நமச்சிவாய..!