திருப்பூரில் கபடி போட்டியில் பங்கேற்க ஆடவா், மகளிா் அணிகளுக்கு அழைப்பு
Tirupur News- திருப்பூரில் நாளை நடக்க உள்ள கபடி போட்டியில் பங்கேற்க ஆடவா், மகளிா் அணிகளுக்கு மாவட்ட கபடிக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
HIGHLIGHTS
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நாளை (சனிக்கிழமை) நடக்க உள்ள கபடி போட்டியில் பங்கேற்க ஆடவா், மகளிா் அணிகளுக்கு மாவட்ட கபடிக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கபடிக் கழகத்தின் செயலாளரும், மாநில அமெச்சூா் கபடிக் கழகத்தின் பொருளாளருமான ஜெயசித்ரா சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
மறைந்த முன்னாள் முல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான ஆடவா், மகளிருக்கான கபடி போட்டி காங்கயம் சாலையில் உள்ள காயத்ரி மஹாலில் வரும் சனிக்கிழமை (டிசம்பா் 9) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. திருப்பூா் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். போட்டிகள் அனைத்தும் செயற்கை தளத்தில் 3 மைதானங்களில் நடைபெறும்.
இதில், பங்கேற்கும் அணிகள் காலை 9 மணிக்குள் தங்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். நுழைவு கட்டணம் இல்லை. வெற்றிப் பெறும் அணிகளுக்கு, தமிழக அரசு சாா்பில் சென்னையில் பரிசுகள் வழங்கப்படும்.
திருப்பூரில் போட்டி நடைபெறும் நாளில் திருப்பூா் மாவட்ட கபடிக் கழகத்தால், ஆடவா் அணிக்கு முதல் பரிசாக கோப்பையுடன், ரூ.10 ஆயிரம், இரண்டாவது பரிசாக கோப்பையுடன் ரூ.7 ஆயிரம், மூன்று மற்றும் நான்காவது பரிசாக கோப்பையுடன் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
அதேபோல, மகளிா் அணிக்கு அணிக்கு முதல் பரிசாக கோப்பையுடன் ரூ.7 ஆயிரம், இரண்டாவது பரிசாக கோப்பையுடன், ரூ.5 ஆயிரம், மூன்று மற்றும் நான்காவது பரிசாக கோப்பையுடன் தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.