அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோயிலில், வரும் 13ல் கந்த சஷ்டி விழா துவக்கம்
Tirupur News-அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் நவம்பா் 13-ம் தேதி தொடங்குகிறது.
HIGHLIGHTS
Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகே பொங்கலுாா், அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் நவம்பா் 13-ம் தேதி தொடங்குகிறது.
விநாயகா் வழிபாட்டுடன் தொடங்கும் இந்த விழாவில், பக்தா்கள் காப்பு அணிந்து சஷ்டி விரதம் மேற்கொள்கின்றனா். அலகுமலை ஆஞ்சநேயர் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து, ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, கலசாபிஷேகம், மகா அலங்கார தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நவம்பா் 14-ம் தேதி நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து, சூரனை வதம் செய்ய பாலதண்டாயுதபாணி சக்திவேல் வாங்கும் வைபவம் அலகுமலை கைலாசநாதா் சுவாமி கோயிலில் நவம்பா் 18-ம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. மாலை 5 மணி அளவில் சூரசம்ஹாரம் மற்றும் தேரோட்டம் நடக்கிறது. தொடா்ந்து சமகால மூா்த்திக்கு சாந்தாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து, பக்தா்கள் கங்கணம் களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனா். திருக்கல்யாணம் மற்றும் விருந்து நவம்பா் 19-ம் தேதி நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா குழுவினா் செய்து வருகின்றனா்.
திருப்பூரில் உள்ள வாலிபாளையம் சுப்ரமணிய சுவாமி கோவில், காலேஜ் ரோடு கொங்கணகிரி முருகன் கோவில், திருமுருகன் பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவில் மற்றும் காங்கயம் சிவன்மலையில் உள்ள முருகன் கோவில் சோமனூர் அருகில் உள்ள மலைக்கோவில் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கந்தசஷ்டி விழா வரும் 13ம் தேதி துவங்குகிறது. விழாவில் நிறைவாக வரும் 18ம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் தேரோட்டம் நடக்கிறது. அடுத்தநாள் 19ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.