வேனில் கடத்திய 350 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
திருச்செங்கோடு அருகே வேனில் ரேசன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
திருச்செங்கோடு அருகே வேனில் கடத்தி வரப்பட்ட 350 கிலோ ரேசன் அரிசியை நாமக்கல் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் ஊமையம்பட்டி சாலையில் நாமக்கல் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
விசாரணையில், அந்த வேனை ஓட்டி வந்தவர், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஓலப்பனூரைச் சேர்ந்த மோகன்குமார் (52) எனத் தெரியவந்தது. அவர் மகுடஞ்சாவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெப்படையில் உள்ள நூல் மில்லில் வேலை செய்வோருக்கு கூடுதல் விலையில் விற்பனை செய்ய எடுத்து செல்வது தெரியவந்தது.
இதையடுத்து மோகன்குமாரை கைது செய்த போலீஸார் வேனில் 7 மூட்டைகளில் வைத்திருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 350 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.