மார்ச் 1ல் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; எம்.பி. அறிவிப்பு
Namakkal news- மார்ச் 1 முதல்வர் பிறந்தநாளில் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என, ராஜேஷ்குமார் எம்.பி. அறிவித்தார்.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- மார்ச் 1ல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்படும் என, தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராஜேஷ்குமார் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது: வரும், மார்ச் 1ம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும், மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட கட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திமுக அரசின் சாதனைகள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்களை, வரும், மார்ச், 2, 3ல் மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடத்த வேண்டும். தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூரில் உள்ள அனைத்து பஞ்சாயத்து, வார்டு, கிளை கழகங்களில், கட்சிக்கொடி ஏற்றியும், இனிப்பு வழங்கியும், பொதுமக்கள் மற்றும் மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
தமிழக மாணவர்களுக்கு, மாதம் ரூ. 1,000 வழங்கும் தமிழ்புதல்வன் திட்டம், குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க, 8 லட்சம் வீடுகள் கட்டி தரும் கனவு திட்டம், வறுமை இல்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு, 5 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் ஆகியவற்றை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, திமுக ஆட்சியின், 3 ஆண்டு சாதனைகளையும், பட்ஜெட் சிறப்பு அம்சங்களையும் வீடு தோறும் கொண்டு சேர்க்கும், இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரசாரத்தை உடனடியாக துவங்குவது உள்ளிட்ட பலர்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில நிர்வாகிகள் ராணி, நக்கீரன், டாக்டர் மாயவன், நகர செயலாளர்கள் பூபதி, ராணா ஆனந்த், சிவக்குமார், சங்கர், ஒன்றிய செயலாளர்கள் ராமசுவாமி, அசோக்குமார், பாலசுப்ரமணியம், ஜெகநாதன், நவலடி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.