பயிர் கடன் மற்றும் விவசாய மின் இணைப்பு பெற மங்களபுரத்தில் நாளை சிறப்பு முகாம்
Crop Loan Special Camp வட்டியில்லா பயிர் கடன் மற்றும் விவசாய மின் இணைப்பு பெற மங்களபுரத்தில் நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
Crop Loan Special Camp
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நில அளவை செய்யப்படாத பகுதி மக்களுக்கு, வட்டியில்லா பயிர்கடன் மற்றும் மின்சார இணைப்பு பெறுவதற்கான சிறப்பு முகாம், நாளை 2ம் தேதி, காலை 10.30 மணிக்கு, மங்களபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெறுகிறது.
பயிர்கடன் பெற தேவையான ஆவணங்கள்:
விவசாயிகள் பயிர்கடன் பெற, பட்டா வழங்கப்பட்ட உத்தரவு நகல், கம்ப்யூட்டர் சிட்டா, எப்எம்பி நகல், அடங்கல் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2 உள்ளிட்ட ஆவணங்களுடன் ரூ.110- கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட ஆவணங்களுடன் பயனாளிகள், முகாம் நடைபெறும் மங்களபுரம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்.
வீட்டு மின் இணைப்பு பெற தேவையான ஆவணங்கள்:
மனுதாரரின் புகைப்படம், கம்ப்யூட்டர் சிட்டா, வீட்டுவரி இரசீது இவற்றுடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, சிங்கிள் பேஸ் மின் இணைப்புக்கு ரூ. 5,192, 3 பேஸ் மின் இணைப்புக்கு ரூ. 13,640 கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விவசாய மின்சார இணைப்பு பெற தேவையான ஆவணங்கள்:
கம்ப்யூட்டர் சிட்டா, கூட்டு கிணறு அல்லது பட்டா எனில் மற்ற பட்டாதாரரின் சம்மத கடிதம் அல்லது பட்டாதாரர் இறந்திருந்தால் வாரிசு சான்று நகல். பட்டாதாரருக்கு குறைந்தபட்சம் 50 சென்ட் விவசாய நிலம் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.200 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்தி ஆன்லைன் மூலம் மனு செய்ய வேண்டும். விவசாய இணைப்பிற்கு 5 எச்.பிக்கு 2.50 லட்சம், 5 முதல் 7.5 எச்.பிக்கு 2.75 லட்சம், 7.5 முதல் 10 எச்.பிக்கு 3 லட்சம் வீதம் ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேற்படி மின்சார இணைப்பு பெற பயனாளிகள் இன்டர்நெட் மூலம் ஆன்லைனில் மனு செய்து விட்டு மனுவின் நகலினை முகாம் நடைபெறும் இடத்தில் சம்மந்தப்பட்டஅலுவலரிடம் நேரில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.