டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கொல்லிமலையில் போராட்டம்
Delhi Farmers Support Agitation டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கொல்லிமலையில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
Delhi Farmers Support Agitation
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்டியில் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தியான போராட்டம் நடத்தினர்.
டில்லியில் போராடும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கொல்லிமலை பகுதியில் உள்ள பெரியண்ண சுவாமி கோயில் முன்பாக வேட்டி, சட்டை அணியாமல் விவசாயிகள் தியானப் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், பெரியசாமி உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். தகவல் கிடைத்து அங்கு வந்த கொல்லிமலை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.