நாமக்கல்லில் முப்பெரும் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
Namakkal Giant Chariot Festival Started நாமக்கல்லில் முப்பெரும் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
HIGHLIGHTS
Namakkal Giant Chariot Festival Started
ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் கிழக்குப்புறத்தில், அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் குடவறைக்கோயிலாக அமைந்துள்ளது. மலையின் மேற்குப்புறம் அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுறை, நரசிம்மசுவாமி திருக்கோயில் குடவறைக்கோயிலாக அமைந்துள்ளது. நாமகிரியம்மன் கோயில் எதிரில் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஒரே நேரத்தில் 3 திருக்கோயில்களிலும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு, நாமக்கல் நரசிம்மர் கோயில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நாமகிரித்தாயாருக்கும், நரசிம்மருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, நாமகிரித்தாயார் கோயில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கொடிக்கம்பத்தில் பட்டாச்சாரியார்கள் திருக்கொடியேற்றினர்.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நாளை 2ம் நாள் விழாவில் காலை ஸ்நப திருமஞ்சனம் நடைபெறும். இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி உலா நடைபெறும், 20ம் தேதி அனுமந்த வாகனம், 21ம் தேதி கருட வாகனம், 22ம் தேதி சேஷ வாகனம், 23ம் தேதி யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வைபவம் நடைபெறும். 24ம் தேதி மாலை 6 மணிக்கு நரசிம்மர், நாமகிரி தாயார் திருக்கல்யாண உற்சவம், குளக்கரை மண்டபத்தில் நடைபெறும். சுவாமி திருமண உற்சவத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிக்கு மொய் சமர்ப்பிப்பது சிறப்பாகும். 25ம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 26ம் தேதி காலை 8.30 மணிக்கு கோட்டை ரோட்டில் நரசிம்மர் சுவாமி திருத்தேரோட்டம் நடைபெறும். பிற்பகல் 4.30 மணிக்கு மெயின்ரோட்டில் ஸ்ரீ அரங்கநாதர், ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் தேரோட்டம் நடைபெறும்.
27ம் தேதி கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும், 28ம் தேதி வசந்த உற்சவம், 29ம் தேதி விடையாற்றி உற்சவம், 30ம் தேதி புஷ்ப பல்லக்கு, 31ம் தேதி ஊஞ்சல் உற்சவம், ஏப்.1ம் தேதியுடன் தேர்த்ததிருவிழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் செல்வசீராளன், மல்லிகா குழந்தைவேல், ராம ஸ்ரீனிவாசன், ரமேஷ்பாபு மற்றும் கோயில் உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.