கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 92.21 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் : அமைச்சர் பங்கேற்று துவக்கம்
New Buildings Inaugural Function கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 92.21 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
New Buildings Inaugural Function
நாமக்கல் மாவட்டம், பரமத்தி மற்றும் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், புதிய பள்ளி வகுப்பறை கட்டிடம், பஞ்சாயத்து அலுவலகம், ரேஷன் கடை மற்றும் புதிய அங்கன்வாடி மையங்கள் ரூ. 92.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரசெந்தில் முன்னிலை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்துப் பேசியதாவது:
தமிழக முதல்வர் அறிவிப்பின் பேரில், அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் பசியினைப் போக்கும் வகையில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளுக்கு தேவையான பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளிகல்வித்துறையில் மாணவ, மாணவியர் தொடர்ந்து கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் பல புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்.
மேலும் தமிழக முதல்வர், இல்லம் தேடிக் கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு என மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில புதுமை பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் உயர் கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் திலகவதி (பரமத்தி), ரவி (கபிலர்மலை) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.