நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில் ஆய்வு!
நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில் ஆய்வு செய்தார்!
HIGHLIGHTS
நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை, கல்வித்துறை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் ஆட்சியர் உமா.
கல்வித்துறை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன், நாமக்கல் பகுதியில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அருகில் ஆட்சியர் உமா.
நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில் ஆய்வு
நாமக்கல்,
நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை பள்ளிக்கல்வித்துறை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன் நேரடியாக ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு, வரும் ஜுன் மாதம் பள்ளி திறப்பதற்கு முன்பாக, அனைத்து தனியார் பள்ளி பஸ்களும் அரசு விதிமுறைப்படி இயக்குவதற்கு தகுதியானதாக உள்ளதா, என்பதை மாவட்ட அளவிலான குழு மூலம் பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி பஸ்கள் வருடாந்திர ஆய்வுப்பணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டஆட்சியர் உமா முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பள்ளி கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனியார் பள்ளி பஸ்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வருவாய்த் துறை, பள்ளிக்கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் அலுவலர்களால் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகளின் படி, நாமக்கல் (வடக்கு) மற்றும் நாமக்கல் (தெற்கு) ஆர்டிஓ அலுவலகங்களுக்கு உட்பட்ட 622 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. நாமக்கல் (வடக்கு) ஆர்டிஓ அலுவலக கட்டுப்பாட்டில் 270, ராசிபுரம் பகுதி அலவலகத்தில் 284, நாமக்கல் (தெற்கு) ஆர்டிஓ அலுவலகத்தில் - 352, ப.வேலூர் பகுதி அலுவலகத்தில் 212, திருச்செங்கோடு ஆர்டிஓ அலுவலகத்தில் 395, குமாரபாளையம் பகுதி அலுவலகத்தில் 247 வாகனங்கள் என மொத்தம் 1,760 தனியார் பள்ளி வாகனங்கள் நாமக்கல் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்படும்.
இந்த ஆய்வின் போது, வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு, தகுதி வாய்ந்த டிரைவர், கண்டக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்களா, மாணவ, மாணவிகள் ஏறும், இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும், பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, அவசரகால வழி, மாணவர்களின் புத்தகப்பையை வைக்க வசதி மற்றும் தீயணைப்பு கருவி உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு, தீயைணப்பு கருவியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து தீயணைப்புத்துறை மூலம் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பின்னர் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும், அரசு திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் நேரில் பார்வையிட்டார். அப்போது பயனாளிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர் கலந்துரையாடினார்.