பழைய குற்றாலத்தில் முன்னாள் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு
College Alumini Meet பழைய குற்றாலத்தில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
College Alumini Meet
நெல்லை மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாபநாசத்தில் இயங்கி வரும் திருவள்ளுவர் கலை கல்லூரியின் 1993ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை பயின்ற வணிகவியல், வரலாறு மற்றும் தமிழ் துறைகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களின் முதலாம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி தென்காசி அருகே பழைய குற்றாலத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் வைத்து நடைபெற்றது. இதில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் பயின்று இந்தியாவின் நாகாலாந்து,மும்பை உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வரும் 80க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்தித்தனர். காலையில் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் கல்லூரியில் தாங்கள் பயிலும் பொழுது நடைபெற்ற நிகழ்வுகளை எடுத்துரைத்து கண்ணெதிரே கொண்டு வந்தனர்.
பின்பு மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியின் பொழுது மறைந்த தேமுதிக தலைவரும் திரைப்பட நடிகருமான விஜயகாந்திற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாபநாசம் தாமிரபரணி நதியை சுத்தம் செய்யும் சேவை புரிந்ததற்காக சமூகசேவைக்காக முன்னாள் மாணவரான ராமகிருஷ்ணன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் வண்ணம் சிவதாசன்,பொன்னுசாமி,கோபிநாத்,சிவகுமார் ஆகிய ஐந்து பேருக்கும் பாபநாசம் முன்னாள் மாணவர்கள் சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
செல்போன் வாட்ஸ் அப் மூலம் மட்டுமே பேசிக்கொண்ட அனைவரும் நேரில் முதன் முதலில் சந்தித்ததால் ஆரத்தழுவி கட்டியணைத்து தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர். பாபநாசம் கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் முதலாம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஒருங்கிணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மதியம் நடைபெற்ற உணவு இடைவேளையின் பொழுது நண்பர்கள் அனைவரும் அமர்ந்து ஒருவருக்கொருவர் உணவை புன்னகையுடன் பரிமாறிக் கொண்டு உணவு அருந்திய பின்பு நண்பர்களின் இலைகளை நண்பர்களே எடுத்து சுத்தம் செய்வது அங்கு கலந்து கொண்ட அனைவரையும் மெய்சிலிர்க்கும் வண்ணம் அமைந்தது. முதல் சந்திப்பு நிகழ்வை நடத்திய பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கும் நிகழ்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.