பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்புக்கு, நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
வரலாறு காணாத கோடை வெயிலால் பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உரிய நிவாரணம் வழங்கக்கோரி பட்டுப்புழு கூடு உற்பத்தி விவசாயிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வரலாறு காணாத கோடை வெயில் வெப்பம் அதிகளவு காணப்பட்டது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் பட்டுப்புழு கூடு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பட்டு வளர்ச்சி துறை சார்பில் வழங்கப்படும் முட்டைகள் தரமற்றிருப்பதாகவும், வீரியம் இல்லாத முட்டைகளை வழங்குவதால் முழுமையான பட்டுப்புழு கூடுகளை உற்பத்தி செய்ய முடியவில்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே நஷ்டம் அடைந்த பட்டுப்புழு கூடு உற்பத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரண வழங்க வேண்டும், ஜனவரி மாதம் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை அதனையும் விரைந்து வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.